உறையூர் தொல்லியல் அகழாய்வு
பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி
உறையூர் சங்க காலத்துத் தொடக்கச் சோழர்களின் தலைநகராய்த் திகழ்ந்தது. இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவேரி ஆற்றின் கரைமேல் அமையக் கிடக்கிறது. இந்நகர் ஒரு அகநாட்டு வணிக நடுவமாக இருந்தது, அதோடு பிற முதன்மையானத் தென்னிந்திய வணிக நடுங்வங்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தது. சங்க காலத்து அயலக நிலவரைவியலாரான பிளைனி, தாலமி போன்றோர் இந்நகரைச் சுற்றிச்சூழ்ந்து வழங்கிய நடவடிக்கைகள் பற்றி குறிப்புகளை விட்டுச் சென்றனர். தாலமி இந்நகரை ‘உறதூர என்று அழைத்தார். சங்க இலக்கியமும் இந்நகர் பற்றி குறிப்பீடுகளை நல்கி உள்ளது. அந்நாள்களில் இந்நகர் கோழியூர் என்றும் கூட அழைக்கப்பட்டது. இத்தளத்தில் ஒரு சேவல் யானையுடன் போரிட்டதாகக் கூட ஒரு மரபு உள்ளது. இங்கத்து பஞ்சவர்ணேசுவரர் பழங்கோவில் இந்த சேவல் யானைச் சண்டையை வண்ணிக்கும் பண்பாட்டுக் குறிப்பீட்டைப் பெற்றுள்ளது.
இத்தளத்தில் தொல்லியல் அகழாய்வுகள் 1965 முதல் 1969 வரையான காலத்தில் நான்கு பருவங்களுக்கு மேல், சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டை வரலாறு மற்றும் தொல்லியில் துறையால் முனைவர் டி.வி. மகாலிங்கம் தலைமையில், முனைவர் சா. குருமூர்த்தியும் பிறரும் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. பலவேறு அகழிகள் பல்வேறு இடங்களில் போடப்பட்டு பெரும் அளவான தொல்பொருள்கள் திரட்டப்பட்டன. முதல் முறையாக இத்தளத்தில் புதைந்த கட்டமைப்புகளைத் துப்பறிவதற்காக புரத்துரான் காந்த மானி (Proton Magneto meter) பயன்படுத்தப்பட்டது. ஒரு அகழியில் சாயத் தொட்டி ஒன்றன் மீதிமிச்சம் தரைக்குக் கீழே எட்டடி ஆழத்தில் கண்டறியப்பட்டது. இது துணிகளைச் சாயமிடுவதற்கான நீர்த் தொட்டி ஆகும்.
உறையூர் சங்க காலத்தில் ஒரு செழுமையான நெயவுத் தொழில் நடுவமாகத் திகழ்ந்தது, மேலும் இச்சாயத்தொட்டியே இந்த உண்மைக்குச் சான்று. கிறித்து ஊழியின் தொடக்க நூற்றாண்டுகளைச் சார்ந்த இதன் உருவொத்த சாயத்தொட்டி ஒன்று அரிக்கமேட்டில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சாயத் தொட்டி செங்கற்களால் கட்டப்பட்ட அடியில் ஒரு இணைப்புத் துளையுள்ள இரண்டு சிறிய சதுர தொட்டிகளைக் கொண்டிருக்கிறது..இது 4 X 4 அடி அளவு உடையது. இத்தளத்தில் எழுத்துப் பொறிப்புள்ள சிவப்புநிற பிராமிப் பானைஓடு ஒன்று கணடெடுக்கப்பட்டது. அரிக்கமேட்டிற்குப் பின்னீடாக அகழாய்வில் பிராமிப் பானைஓடுகள் கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது தளம் இது. இந்த பிராமியின் சொற்றொடரியம் ஒரு ஆள் இன்று இறந்தான் என்று வாசிக்கத்தக்கது அல்லது ஒரு ஆள் போரிட்டு மடிந்தான் என்று வாசிக்கலாம் எனவும் கொள்ளலாம் இப் பானைச் சில்லின் பிராமி வரிவடிவம் தொல்லெழுத்தியலின்படியும் (paleography) மண்ணடுக்கியலின்படியும் (stratigraphy) கி.மு. 3 ஆம் நூற்றாண்டினது என நாள் குறிக்கப்பட்டுள்ளது.
உரோமர் தொடர்புகளைச் சுட்டுகின்ற உரோம வனைதொழில் சார்ந்த வட்டப்புள்ளி மட்கலங்கள் (roulettedware), பொலிவித்த சிவப்பு மட்கலங்கள் (polished redware) போன்றவற்றின் சில்லுகள் சிலவும் இவற்றில் உண்டு. பெரும் எண்ணிக்கையில் கீறல்குறிகள் (graffitti) பெற்ற நாட்டுப் பானைஓடுகளும் இத்தளத்தில் இருந்து திரட்டப்பட்டு உள்ளன. இவற்றில் ஒற்றைக் கீறல்குறியும், கூட்டுக் குறியீடுகள் எனப்படும் தொகுப்பான கீறல்குறிகளும் (graffiti) உண்டு. கூட்டுக்குறியீடுகள் தொடக்க வடிவ பிராமி மற்றும் தமிழ் எழுத்துகள் குறித்து விளக்கும் வரலாற்று முகாமையைப் பெற்றவை. அவற்றுள் பழைய வரிவடிவ அமைப்புஉடைய இரண்டிற்கும் மேற்பட்ட குறிகள் உள்ளன. இக்குறிகள் மற்றும் சொற்றொடர்கள் சில சிந்து எழுத்துக் குறி மற்றும் சின்னங்களுடன் ஒப்பிடப்பட்டன. தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், போன்ற பிற தளங்களும் சிந்து போன்ற எழுத்தை உருவில்ஒத்த கூட்டுக் குறியீடுகளை ஈட்டித் தந்துள்ளன. முனைவர் சா. குருமூர்த்தி 5,000 மேற்பட்ட கீறல்குறியீடுகளை இந்தியாவின் பற்பல அகழாய்வுகளில் இருந்து திரட்டி இருக்கிறார், அவற்றுள் பன்னிரண்டிற்கும் அதிகமான கூட்டுக் கீறல்குறியீடுகள் தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்பட்டவை. இக் கூட்டுக் கீறல்குறியீடுகள் பெரும்அளவில் கீழ்க் காவேரிப் பள்ளத்தாக்கின் கழிமுகத்திட்டுகளில் இருந்தே திரட்டப்பட்டன. இக் கீறல்குறியீடுகள் சிந்து போன்ற வரிவடிவை நிகர்க்கின்றன என்பதோடு, ஆசிரியர் முனைவர் சா. குருமூர்த்தியின்படி சிந்து எழுத்து நீண்ட காலத்திற்கு மூன்னீடேயே காவேரி வடிநிலத்தை வந்தடைந்துவிட்டது. மேலும், இந்த கூட்டுக் குறியீடானது அரப்பாவின் வீழ்ச்சிக்குப் பின்னீடும் மௌரியர் எழுச்சிக்கு முன்னீடும் பிராமி மற்றும் தமிழ் வரிவடிவங்களுக்கு முன்னோடியாகவோ அல்லது இந்தியா முழுமையிலும் நிலவிய மூல தமிழ் வரிவடிவமாகவோ இருக்கலாம் என்பதையும் அவர் கண்டறிந்து உள்ளார். இந்த மதிக்கையின்படி உறையூர் சிறப்பு கவனம் பெறத்தக்கதாய் உள்ளது.
சிறு தொல்பொருள்கள் குறிப்பாக, அரை மணிக்கல் மணிகள், சங்கு வளையல்கள், மணிகள், இரும்புப் பொருள்கள், செம்புப் பொருள்கள் ஆகியன இவ்வட்டாரத்தின் பொருள் பண்பாடு குறித்து ஒளிஎறியும்படியாக பெரும் எண்ணிக்கையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இத்தளத்தின் காலக் கணக்கீடு மண்ணடுக்கியல், அதோடு கூட்டாகக் கண்டறியப்பட்ட கருப்பு – சிவப்புநிற மட்கலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கி.மு.1000 – கி.மு. 300 க்கு இடையேயான காலம் என்று பொருத்தலாம். கூட்டுக் குறியீடுகளும் கூட இத்தளத்தை அசோகன் காலத்திற்கும் மிக முற்பட்டதாகக் கொண்டு செல்லும்படியான ஒளியை எறிகின்றன. இச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தின் அகழாய்வை இணைந்து நடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு).