கண்டராதித்தர்
இராசகேசரி வர்மன் கண்டராதித்தர் இடைக்காலச் சோழ மன்னர்களில் முதலாம் பராந்தகனுக்குப் பின்னர் பட்டஞ் சூட்டிக்கொண்டவர். இவர் கி.பி 950 தொடக்கம் 955 வரையுமே சோழ நாட்டை ஆண்டார். முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே சோழநாட்டின் வடக்கே இராஷ்டிரகூடர்கள் பலமடைந்து இருந்தனர். கண்டராதித்தரின் ஆட்சியின்போது அவர்கள் தஞ்சைக்கு முன்னேறி அதனைத் தாக்கி அழித்தனர். சோழர்கள் பலமிழந்திருந்த இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அதுவரை சோழருக்குக் கீழ்ப்பட்டுத் திறை செலுத்தி வந்த பாண்டிய நாடும் சோழர் மேலாதிக்கத்தை உதறினர். பலமுறை முயன்றும் சோழநாட்டின் எல்லைகள் குறுகுவதைக் கண்டராதித்தரால் தடுக்க முடியவில்லை.
மறைவு
கண்டராதித்தரின் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியான அரிஞ்சய சோழன் பட்டத்துக்கு வந்தார்.
இவரைப் பற்றிய நூல்கள்
கண்டன் கோவை, கண்டன் அலங்காரம் என்னும் நூல்களைப் பாடி ஒட்டக்கூத்தர் இவருக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
திருப்பணி
இவர் பல சிவன் கோயில்களுக்குத் திருப்பணி செய்துள்ளார். புறச் சமயத்தினரையும் நன்கு மதித்தார். கல்வெட்டுகளில் இவர் சிவஞான கண்டராதித்தர் என்று குறிப்பிடப்படுகிறார்.
பொன்னியின் செல்வனில் கண்டராதித்தர்
கண்டராதித்தர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழ மன்னனும், செம்பியன் மாதேவியின் கணவரும் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற கண்டராதித்தரைச் சற்றுப் புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.
அதன்படி,
பராந்தக சோழரின் ஆட்சிக்குப் பிறகு, அவருடைய மகன்களான இராஜாத்திரும், அரிஞ்சைய சோழரும் போருக்கு செல்கிறார்கள். அங்கே இராஜாதித்தர் மறைந்துவிட, அரிஞ்சய சோழரும் பெரும்காயமடைகிறார். அந்நேரத்தில் ஈழப் போருக்குச் சென்ற சுந்தர சோழரும் கிடைக்காததால் கண்டராதித்தர் சோழ மன்னராகிறார். போர், ஆயுதம், அரசியல் இவற்றில் விருப்பம் கொள்ளாமல் சிவ வழிபாட்டிலேயே காலம் கழிக்கின்றார். ஓர் நாள் மழவரையருடன் வரும் போது சிவாலயத்தில் தவத்தில் மூழ்கியிருக்கும் செம்பியன் மாதேவியைப் பார்க்கின்றார். மழவரையர் முதலியோருடன் அவள் அருகில் சென்று யார் இந்த பெண்ணென வினவுகிறார். தவம் கலைந்து எழுந்திருக்கும் செம்பியன் மாதேவி சிவனே காட்சிதருவதாக எண்ணி மனமுருகி வணங்கி, கண்களில் நீர் கோர்க்க நிற்கின்றாள். பின்பு தன் முன்னே இருப்பது சிவனல்ல, அரசன் என்பதை அறிந்து ஓடிவிடுகிறாள். தன்னைப்போலவே சிவசிந்தனையில் இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள கண்டராதித்தர் விரும்புகிறார். செம்பியன் மாதேவியும் சிவபக்தரான கண்டராதித்தரை ஏற்றுக் கொள்கிறாள்.
நீண்ட காலம் மகவு ஆசையின்றி இருந்தார்கள். ஆனால் செம்பியன் மாதேவி பிற பெண்கள் குழந்தைகளுடன் இருப்பதைக் கண்டு தாய்மையடைய விருப்பம் கொள்கிறார். அவருக்கு பிறக்கும் குழந்தை இறந்தே பிறக்கிறது. அதனால் அரண்மனையில் மந்தாகினி பெற்றெடுத்த ஒரு பிள்ளையைச் செம்பியன் மாதேவி வளர்க்கிறார். சோழ குலத்தில் பிறக்காத குழந்தை சோழ மன்னராக வருவது, சோழ குலத்திற்குச் செய்யும் பாவச் செயல் என்று கண்டராதித்தர் நினைக்கிறார். எக்காரணம் கொண்டும் செம்பியன் மாதேவி வளர்க்கும் குழந்தை சோழ மன்னராகக் கூடாதென செம்பியன் மாதேவியிடம் கூறுகிறார். அதனை ஏற்றுத் தன் பிள்ளையென வளர்க்கும் மதுராந்தகனைச் சிவ பக்திமானாக மாற்றுகிறார் செம்பியன் மாதேவி.