கள்ளக்காதல் தேவைதானா?
கள்ளக்காதல்: என்னதான் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பதே இந்திய பண்பாடு என்று நாம் காலம் காலமாக சொல்லி வந்தாலும், கள்ளக்காதல் என்று சாதாரணமாக சொல்லப்படும் இந்த கூடுதல் காதல் / திருமண உறவுகள் காலம் காலமாக நமது நாட்டில் இருந்து வருவது உண்மை இப்படிப்பட்ட உறவுகள் தழைத்தோங்க,
- சமூக வலைத்தளங்களும்,
- செல் ஃபோன்களும்,
- நவீன வாழ்க்கை முறையும்
இன்னும் ஏதுவாக இருக்கின்றன.
வெளியிலிருந்து பார்க்கும் சிலருக்கு, இவ்வகை உறவுகளில் இருப்பவர்கள் சந்தோஷமாக இருப்பதாக தோன்றினாலும், உண்மையில் அவர்கள் அச்சத்திலும், குற்ற உணர்விலும் கூனிக் குறுகி போய் இருக்கிறார்கள் .
கூடுதல் உறவுகளுக்குள் செல்லும் பலருக்கு, தான் எவ்வாறு அந்த அளவுக்கு சென்றேன் என்ற கேள்விக்கு பதிலே சொல்லத் தெரியாது . வாழ்க்கை பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க பதுங்கு குழிக்குள் இறங்குவதாக நினைத்துக் கொண்டு, தன்னையே அறியாமல், பலர் இந்த பாதாளக் குழிக்குள் விழுந்து விடுகிறார்கள்; சூழ்நிலை கைதிகளாகி விடுகிறார்கள்.
கூடுதல் காதல்/திருமண உறவுகளில் 2 வகை
- உணர்வுப்பூர்வமான கூடுதல் உறவு: ஒரு திருமண/காதல் உறவில் இருந்து கொண்டு இருக்கும் போதே, பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ள, ஆறுதல் பெற, இனிமையாக பொழுதுகளை கழிக்க, அளவளாவ, அறிவுப்பூர்வமான விஷயங்களை பகிர்ந்து, அலசி ஆராய எதிர்பாலினர் ஒருவரை முழுதாய் சார்ந்து இருப்பதையே உணர்வுப்பூர்வமான கூடுதல் உறவு என்று கூறுகிறோம். அந்த குறிப்பிட்ட நபர் ஏதோ ஒரு காரணத்தால், தன்னை கண்டுகொள்ளவில்லை அல்லது தொடர்பு கொள்ள முடியவில்லை எனில் மிக அதிக கோபம், மனச்சோர்வு (அ) விரக்தி அடைவது இப்படிப்பட்ட உறவுகளின் ஒரு முக்கிய அறிகுறி.
- உணர்வுப்பூர்வமான கூடுதல் உறவு + பாலியல் பூர்வமான கூடுதல் உறவு: ஒரு திருமண / காதல் உறவில் இருந்து கொண்டு இருக்கும் போதே, வேறு ஒருவருடன் உணர்வுபூர்வமான உறவுடன் சேர்த்து பாலியல் தொடர்பும் சேர்த்து வைத்துக் கொள்வது.
நாம் பொதுவாக முதல் வகையை , கூடுதல் உறவு அல்லது கள்ளக்காதல் என்று சொல்லுவதே இல்லை . திருமண / காதல் உறவு என்பது பாலியலுக்காக மட்டும் அல்லவே ! உணர்வுபூர்வமான உறவுக்கும் சேர்த்து தானே ! எப்போது உணர்வுகளுக்காகவென்று ஓர் எதிர்பாலினரை சார்ந்து இருக்க தொடங்குகிறோமோ , அப்போது திருமண / காதல் உறவின் விதிகளை மீறி செயல்படுகிறோம் அன்றோ !
அது போக , உணர்வுப் பூர்வமான கூடுதல் உறவு நாளடைவில் பாலியல் உறவாக மாற அதிக வாய்ப்பு உண்டு .
எனவே ஒருவர் உணர்வுப் பூர்வமான கூடுதல் உறவில் இருக்கும் போதே அதனை விட்டு விடுவது உத்தமம் .
How To Spice Up Your Marital Sex Life ?
கூடுதல் உறவில் இருப்பவர்களின் உளவியல் பிரச்சனைகள்
சமூக விதிகளுக்கும் , தனிநபர் விழுமியங்களுக்கும் எதிராக நடந்து கொள்கிறோம் என்ற குற்ற உணர்வு
- யாரிடமாவது மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சம்
- காதல் / திருமண உறவின் அடிப்படையான நம்பிக்கையை உடைப்பதால் , தனது சட்டப்பூர்வமான துணையிடம் முழுமையான ஈடுபாடு இல்லாமல் போய் அதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுவது
- சட்டப்பூர்வமான துணையிடம் உண்மையை கூறவும் முடியாமல் , கூறாமல் இருக்கவும் முடியாமல் தவிப்பது
கூடுதல் உறவில் இருக்கும் இருவரில் ஒருவருக்கு பிரச்சனை ஏற்படும் சமயத்தில் , பல வகைகளில் மற்றொருவருக்கு ஏற்படும் பாதிப்பு
கூடுதல் உறவில் இருக்கும் இருவருக்கு இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டால் , யாரிடமும் சொல்லி ஆற்றிக் கொள்ள முடியாமல் போதல்
என்ன தான் அன்பும் பாசமும் தனது சட்டப்பூர்வமான / சமூகவிதிகளின் படி அமைந்த துணையுடன் கொண்டிருந்தாலும் , இந்த கூடுதல் உறவைப்பற்றி தெரியவரும் போது நம்பிக்கை உடைந்து நிர்கதியாதல்
எப்படி இந்த கூடுதல் உறவுகளிலிருந்து வெளியேறி இயல்பான வாழ்க்கை வாழ்வது ?
இந்த கேள்விக்கு பதிலளிக்க , இன்னும் பல கேள்விகள் கேட்க வேண்டி இருக்கும் .
- இருவருமே வெளிவர நினைக்கிறார்களா அல்லது ஒருவர் மட்டுமா ?
- கூடுதல் உறவில் இருப்பவர்கள் இருவரின் ஆளுமை / குண நலன்கள் எப்படி ?
- உண்மையை சட்டப்பூர்வமான / சமூக விதிகளின் படி அமைந்த துணைகளுக்கு சொல்லப்போகிறார்களா ?
- ஆம் அல்லது இல்லை எனில் எப்படி அந்த சூழ்நிலையை சமாளிக்க போகிறார்கள்
- ஏன் இப்போது வெளிவர வேண்டுமென்று நினைக்கிறார்கள் ?
- வெளி வந்த பிறகு இருக்கும் சூழ்நிலைகளை கையாளுவது எப்படி ?
இந்த கேள்விகளுக்கு ஒவ்வொருவரின் விடையும் வெவ்வேறானதாய் இருக்கும் . ஆகவே உளவியல் ஆலோசகரை நாடுவது தான் சிறந்த வழி .
கூடுதல் திருமண / காதல் உறவுகள் என்ற கருத்தாக்கத்தை கொஞ்சம் ஆழமாக பார்த்தால் , கூடுதல் உறவுகளை சட்டம் தடை செய்தாலும் , சமூகம் தவறென்று கூறினாலும் , மனித மனம் சபலம் அடையத்தான் செய்கிறது . உளவியல் பூர்வமாக பார்த்தால் , சபலம் அடைவது மனித இயல்பு , அது தவறல்ல . அந்த சபலத்தை எப்படி கையாள்கிறோம் என்பதில் தான் விஷயம் உள்ளது .
சபலத்தை குறைக்க / போக்க நேர்மறையான இரண்டு வழிகள் உள்ளதாக உளவியல் கூறுகிறது .
- சமூக விதிகளுக்கு உட்பட்டு முறையாக திருமணம் / காதல் செய்து வாழ்வது ,
- திருமணம் ஆகாவிடில் அல்லது துணையுடன் உறவு கொள்ள முடியாவிடில் சுய இன்ப பழக்கத்தை மேற்கொள்வது .
சமூக விதிகளுக்கு எதிரான வழிகள் என்னவென்று பார்த்தால்:
- கூடுதல் திருமண / காதல் உறவு கொள்வது ,
- குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது ,
- கற்பழிப்பு முயற்சி போன்றவை .
இவை தனிமனிதருக்கும் சரி , சமூகத்திற்கும் சரி , பல கேடுகளையே விளைவிக்கிறது .
இது போன்ற சமூக விதிகளுக்கு எதிரான செயல்படுவர்கள் , நாளடைவில் பல மன நோய்களுக்கு ஆளாகி விட வாய்ப்பு உண்டு .
எனவே இது போன்ற தொடர்புகளை (கள்ள காதல்) தொடக்கதிலேயே புரிந்துகொண்டு விளகிவிடுவது இருவருக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் மிக்க நன்மை தரும்.