கீழடியில் ரூ.12.21 கோடியில் அகழ் வைப்பகம்: காணொளி மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

திருப்புவனம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் ரூ.12.21 கோடியில் அகழ் வைப்பகம் கட்டுவதற்கு காணொளிக் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
திருப்புவனம் அருகே கீழடியில் 110 ஏக்கரில் தொல்லியல் மேடு அமைந்துள்ளது. இங்கு 2014 முதல் அகழாய்வு நடந்து வருகிறது. ஏற்கனவே மூன்று கட்ட அகழாய்வு மத்திய தொல்லியல்துறை மூலமாகவும், 4 மற்றும் 5-ம் கட்ட அகழாய்வு தமிழக தொல்லியல்துறை மூலம் நடந்தது.
தற்போது 6-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதுவரை 14,535 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்த அகழாய்வு மூலம் கீழடி நகர நாகரீகம் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரியவந்தது.
இதையடுத்து தொல்பொருட்களை பொதுமக்கள், மாணவர்கள் காணும் வகையில் கீழடி அருகே கொந்தகையில் 2 ஏக்கரில் உலகத்தரம் வாய்ந்த அகழ் வைப்பகம் அமைக்க ரூ.12.21 கோடி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அகழ் வைப்பகத்திற்கு காணொலிக் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
கொந்தகையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், எம்எல்ஏ நாகராஜன், தொல்லியல்துறை இணை இயக்குநர் சிவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.