தமிழகத் தொல்லாய்வுத் துறை கீழடி ஆய்வுப் பணியில் ஈடுபட வேண்டும்: பழ.நெடுமாறன்

தமிழகத் தொல்லாய்வுத் துறை கீழடி ஆய்வுப் பணியில் ஈடுபட வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”வைகை கரை கீழடியில் நான்காம் கட்ட அகழ்வாய்வுக்கு அனுமதியை உடனே வழங்க வேண்டும் என மத்திய தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேலும் இந்த அகழ்வாராய்ச்சிப் பணியில் மாநில அரசும் இணைந்து செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளதை வரவேற்கிறேன்.
மாநில தொல்லியல் துறை, கீழடி அகழ்வாராய்ச்சிப் பணியில் ஈடுபடுவதன் மூலம் மேலும் பல வரலாற்று உண்மைகள் வெளிப்படும். ஏற்கெனவே கீழடியில் இப்பணியில் ஈடுபட்டு சங்க கால வரலாற்றுத் தடயங்களை கண்டறிந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
மத்திய அரசுக்கு எழுதி தமிழகத் தொல்லாய்வுத் துறைக்கு அவரை அனுப்புமாறு கேட்டுப் பெற்று, அவர் மூலம் இந்த ஆய்வினைத் தொடர வழிவகுக்க வேண்டுமென தமிழக முதல்வரை வேண்டிக் கொள்கிறேன்” என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.