திருவள்ளுவமாலை
திருவள்ளுவமாலை (thiruvalluva malai) எனும் நூல் திருக்குறளின் பெருமைகளையும், திருவள்ளுவரின் பெருமைகளையும் புகழ்ந்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். ஒருநூலுக்கோ, நூலாசிரியனுக்கோ இப்படி எல்லாப் புலவர்களும் வரிசை கட்டிப் புகழாரம் தொடுத்தளித்தது, திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் மட்டுமே கிடைத்த முதற் சிறப்பு.
திருவள்ளுவமாலையில் ஐம்பத்தைந்து பாடல்கள் உள்ளன. ஐம்பத்து மூன்று புலவர்கள் பாடியுள்ளார்கள். இடைக்காடர், ஔவையார் இருவரும் குறட்பாவிலும், ஏனைய ஐம்பத்து மூவரும் வெண்பாக்களாலும், வள்ளுவரையும் திருக்குறளையும் புகழ்ந்த பாமாலைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
காலம்
இதில் உள்ள பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் சார்த்தப்பட்டவை. இந்தத் தொகுப்புநூல் உருவான காலம் கி. பி. 11 ஆம் நூற்றாண்டு.
சான்றுகள்
- சங்கப் புலவர்களும் சம காலத்தவர் அல்லர்.
- இதில் உள்ள புலவர் பாரதம் பாடிய பெருந்தேவனார், 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
- புலவர் எண்ணிக்கையில் குழப்பம்.
- ஒருவர் பாடிப் பிறர்மேல் சாற்றிய நூல்கள் (திருமூலர் ஞானம், திருவள்ளுவர் ஞானம்)
பிற்காலப் புகழாரம்
இவை தவிர்த்துக் கல்லாடனார், சிவப்பிரகாசர், பாரதியார், பேராசிரியர் மனோன்மணீயம் பெ.சுந்தரனார், கவிமணி, பாரதிதாசன் போன்ற இடைக்கால மற்றும் பிற்காலப் புலவர்களும் திருக்குறளைப் புகழ்ந்து பாடல்கள் இயற்றி உள்ளனர். அவை திருவள்ளுவ மாலையில் இடம் பெறாது.
தொடுத்தது யார்?
அசரீரி, நாமகள், இறையனார், உக்கிரப்பெருவழுதி உரைத்த பாக்களுடனே சங்கப்புலவர் நாற்பத்தொனபதின்மரும் பாடிய பாடல்களுமாகக்கூடி ஐம்பத்து மூன்று பாக்களைக் கொண்டதாக அறியப்படுவது வள்ளுவமாலை. இவ்வாறாக விண்ணிலிருந்து வந்த ஒலியாகவும் உடல்கொண்டோராலும் பாடப்பட்ட பாடல்களுடன் மேலும் ஔவையார், இடைக்காடர் ஆகியோர் பாக்களையும் சேர்த்து இப்பொழுது திருவள்ளுவமாலை ஐம்பத்தைந்து பாடல்கள் கொண்டதாக உள்ளது.
வள்ளுவமாலையில் இடம்பெற்றுள்ள புலவர் பெயர்களை அறிவதற்குரிய ஆதாரங்கள் சங்க நூல்கள் அன்றி வேறு ஒன்றுமில்லை. அவ்வாறு நோக்கும்போது இதில் காணப்படும் பெயர்களுள் சில சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கவில்லை. இறையனார் களவியலுரையின்படி கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் நாற்பத்தொபதின்மர் ஆவர். இவர்களில் சேந்தம் பூதனார், அறிவுடையரானார், பெருங்குன்றூர்க் கிழார், இளந்திருமாறன், மருதன்இளநாகனார் ஆகிய இவர்கள் பெயர் வள்ளுவமாலையில் காணப்படவில்லை. வள்ளுவமாலையில் காணப்படும் உருத்திரசன்மர், நத்தத்தனார், முகையலூர்ச் சிறுகருந்தும்பியார், எறிச்சனூர் மலாடனார், போக்கியார், நாகன் தேவனார், செங்குன்றூர்க் கிழார், கவிசாகரப் பெருந்தேவனார், செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார், வண்ணக்கஞ் சாத்தனார், களத்தூர்க் கிழார், நச்சுமனார், அக்காரக்கனி நச்சுமனார், குலபதி நாயனார், தேனீக்குடிக் கீரனார், கொடிஞாழன் மாணிபூதனார், கௌணியனார், மதுரைப் பாலாசிரியனார் என்பவர்களைச் சங்க இலக்கியங்களில் காண முடியவில்லை. சங்கப் புலவர்கள் வாழ்ந்தது ஒரே காலத்தில் அல்ல. அவர்கள் வாழ்ந்த கால இடைவெளி சில நூற்றாண்டுகள் ஆகும். எனவே பாடல்கள் ஒரே காலத்தில் தோன்றியன என்பதும் ஏற்க இயலாது. வள்ளுவமாலைப் பாக்கள் சங்ககாலத்தில் அமைந்துள்ள ஓசை தராமல் பிற்கால இலக்கணமமைந்த ஓசை தருகின்றன என்றும் சங்கநுல்களில் காணப்படாத சொற்சிதைவு இப்பாடல்களில் காணப்படுவதையும் ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். எனவே குறளைப் பற்றிச் சங்கப் புலவர்கள் பாடிய பாடல்களின் திரட்டே வள்ளுவமாலை என்பது பொருந்தாதாகிறது.
இந்நூல் அனைத்தும் ஒரே புலவரால் பாடி இயற்றப்பட்டிருக்கூடும் என்னும் கருத்தையும் ஆராய்ச்சி அறிஞர்கள் மறுத்துள்ளனர். இந்தப் பாராட்டு மாலை யாரோ ஒருவரோ அல்லது ஒரு சிலரோ வெவ்வேறு காலங்களில் எழுதிய பாடல்களின் தொகுப்பாக இருக்கலாம் என்பது பொதுவான கருத்து. வள்ளுவமாலையிலுள்ள பாடல்களுள் சில சங்கப் புலவர்களாலும், சில பிற்காலப் புலவர்களாலும் பாடப் பெற்றிருக்கலாம்; பின்னர் இவை நுலாகத் தொகுக்கப் பெற்றிருக்க வேண்டும் எனவும் கொள்ள முடிகிறது.
சங்கப்புலவர்கள் பாடியதுபோலப் பிற்காலத்தவர் பாடிவைத்த பாடல் தொகுப்பே வள்ளுவமாலை என்பது மற்றொரு கருத்து. வள்ளுவமாலையை இயற்றியவர் தமது பல்வேறு பாடல்களுக்குத் தம் விருப்பத்திற்கேற்பப் புகழ்வாய்ந்த சங்கப் புலவர்களின் பெயர்களை அமைத்துக் கொண்டிருக்கலாம். பாடல்களின் அமைப்பையும் பாடுபொருளையும் காணும்போதும் இம்மாலையை ஒருவரே தொகுத்தார் என்பதற்கான காரணம் வலுப்படும்.
திருவள்ளுவமாலை தாக்கங்கள்
பண்டைத் தமிழ் இலக்கியத்தில் காணப்பெறும் ஒரே திறனாய்வு நுல் திருவள்ளுவமாலையே என்பர் அறிஞர். திருக்குறள் பற்றிய ஆராய்ச்சிக்கு வள்ளுவமாலையில் ஓரு தொடக்கம் உண்டானது எனலாம். இது திருக்குறளுக்குச் செய்யப்பட்ட சிறப்பு எனவும் கொள்வர்.
வள்ளுவமாலை திருக்குறளின் நயத்தையும் சிறப்பையும் ஆராய்ந்துரைக்கும் திறனாய்வு மாலையாக விளங்குகிறது. இதிலுள்ள ஒவ்வொரு பாடலும் குறளை அணுகிய முறை வெவ்வேறாக உள்ளது. இப்பாடல்கள் வள்ளுவரை,
- தெய்வ வாக்கு கொண்டவர் என்று வாழ்த்தும்;
- குறள் மறைநூலுக்கு மேலானது, இணையானது எனவும்
- வடமொழியின் சிறப்பிற்கு மறைநூல்; தமிழ்மொழியின் பெருமைக்குக் குறள்,
முப்பாலில் நாற்பால் மொழியப்பட்டது எனவும் ஒப்பாய்வு செய்யும்; பால், இயல், அதிகாரத் தொகுப்பு இவற்றைக் கூறி குறளின் சொற்பொருள், யாப்பின் அமைப்பு ஆகியவற்றின் சிறப்புபற்றிப் பேசும்; உள்ளத்து இருளை நீக்கும் வாழ்வியல் நூல் என்றும் இருவினை நீக்கும் மாமருந்தாகிய ஆன்மநூல் இது என்றும் போற்றும். இவ்வாறு பல்வேறு நிலைகளில் திருக்குறளின் பாடுபொருளும் பாடுமுறையும் ஆராயப்பட்டுள்ளன.
வடமொழியில் தோன்றிய வேதம் மூலநூல், குறள் அதன் வழிநூல் என்று ஒரு பாடல் கருத்து உரைக்க அதற்கு மாறாகத் திருக்குறள் மூலநூலே, திருக்குறளோடு எந்த நூல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தல் பொருத்தமாகாது என்பதை வேறு ஒரு பாடல் உணர்த்துகிறது.
வடமொழிநூல்களோடு திருக்குறளை ஒப்பிட்டுப் பேசுதல் ஒவ்வாது என்பதனை வலியுறுத்தும் போக்கு அக்காலச் சூழலிலேயே தோன்றியமையும், திருக்குறள் தமிழில் எழுந்த மூலநூல் என்பதனை வள்ளுவமாலை மூலமும் நிறுவப் பெற்றமையையும் காணலாம்.
வள்ளுவமாலை எழுந்த காலத்தில் மாந்தர் பெரிதாக மதித்து வந்ததாகக் கருதப்படும் வைதீக நூல்களுடன் திருக்குறளை ஒப்பிட்டுப் பாராட்டிக் கூறியதன் நோக்கம் தமிழின் ஆற்றலை மற்றவரும் உணர வேண்டும் என்பதே என்று ஒரு கருத்து உள்ளது. ஆனால் காலப்போக்கில் இந்த ஒப்பீடே பிறழ உணரப்பட்டுப் பின்னையோர் திருக்குறள் கருத்துகள் வடநூற் கருத்துக்களின் பிழிவாகக் கருதத் தொடங்கி விட்டனர்; பின்வந்த உரையாசிரியர்களின் வெவ்வேறு அணுகுமுறைக்கு மாலைப்பாடல்கள் அடித்தளமாக அமைந்து விட்டன என்பதும் தெளிவாகும் என்பர் ஆய்வாளர்கள்.
வள்ளுவமாலை தரும் பாராட்டுரைகளே வள்ளுவத்திற்கு வேறுபொருள் காணத்தூண்டியிருக்கலாம்; அல்லது குறள் தோன்றிய காலத்திலிருந்து பின்னர் பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு கருத்துகள் அதில் ஏற்றியுரைக்கப்பட்ட பின் அக்கருத்துரைகளே வள்ளுவமாலை தரும் கருத்துரைகளாக மாறின எனவும் கொள்ளலாம்.
எவ்வாறாயினும் மூலம் கொண்டிருந்த கருத்துகள் காலப்போக்கில் வள்ளுவமாலையாலும், உரைகளாலும் மாறிப்போயின என்பது உண்மை.
வள்ளுவம் பெற்ற திரிபிற்கு வள்ளுவமாலையும் அடிப்படை என்னும் நிலையில் பல காரணங்களைக் காட்டுவார் கு ச ஆனந்தன். திருக்குறளின் உண்மைப் பொருளையும் உள்ளுறை நோக்கையும் அமைப்பையும் மூலத்திலிருந்து மாற்றியமைத்து வேறுவிளக்கம் தரும் பல பாட்டுகள் வள்ளுவமாலையில் இடம் பெற்றுள்ளன;
தொன்மை நூலாகிய தொல்காப்பியம், சங்க நூல்கள், திருக்குறள் முதலியவற்றில் ‘வீடு’ பற்றிப் பேசும் நான்காம் உறுதிப்பொருள் இல்லை;
- அறம்,
- பொருள்,
- காமம்
என்ற மூன்று மட்டுமே பேசப்படுகின்றன; ஆனால் வள்ளுவமாலையின் பல பாடல்களில் (7,8,20,22,33,38,40,50) திருக்குறளில் இல்லாத நாற்பால் வலியுறுத்திச் சொல்லப்பட்டுத் திருக்குறளின் ஆராய்ச்சிப் போக்கை அல்லது திருக்குறள் உணரும் நெறியை மாற்றிவிட்டது என்பார் இவர்.
அடுத்து வள்ளுவமாலை திருக்குறளுக்குத் தரும் இன்னொரு மதிப்பீட்டுரை வேதப்பொருளும் குறட்பொருளும் ஒன்றேயாம் என்பது.
இது தவறான ஒப்பீடு. ஏனென்றால் வேதங்கள் இயற்கை சக்திகளையும் தெய்வங்களையும், யாகம்-சடங்குகள் செய்யும் முறைகளையும் விளக்குபவை;
குறள் போல வாழ்வியல் நெறி; காதல் நெறிகளை விளக்குவன அல்ல. மேலும் குறளை இராமாயணம் போன்ற காப்பியங்களோடு ஒப்பிட்டதும் பொருத்தம் இல்லை.
திருவள்ளுவமாலை பாடல் விளக்கம்
அசரீரி
- மூலம்
- திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோ
- டுருத்தகு நற்பலகை யொக்க- விருக்க
- வுருத்திர சன்ம ரெனவுரைத்து வானி
- லொருக்கவோ வென்றதோர் சொல் (01)
பல இடர்ப்பாடுகள், எதிர்ப்புகளுக்கிடையே மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவர் தம் முப்பாலை(திருக்குறளுக்கு ஆசிரியர் இட்டபெயர்) அரங்கேற்றினார். அரங்கேற்றத்தின் முடிவில் வானத்திலிருந்து ஓர் அசரீரிச்சொல் பாராட்டி எழுந்தது. அதுகுறித்து எழுந்த பாடலே இது.
- பதப்பிரிப்பு
- திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு
- உருத்தகு நல்பலகை ஒக்க – இருக்க
- உருத்திரசன்மர் என உரைத்து வானில்
- ஒருக்க ஓ என்றது ஓர் சொல்
- கருத்துரை
- ‘அருள்திரு’ என்று அழைக்கப்படும் தகுதியுடைய (அதாவது தெய்வம் என்பதாம்) தெய்வத் திருவள்ளுவரோடு, சங்கப்பலகையில் உருத்திரசன்மர் ஒருவரே ஏறியிருந்திடுக என்று ஓர் சொல், வானத்திலிருந்து ‘ஓ’ என்று இரைத்து (ஆரவாரத்தோடு) எழுந்து ஒலித்தது.
நாமகள்
நாமகள் என்பது சரசுவதியைக்குறிக்கும். அந்த நாமகளே- சரசுவதியே- கல்விக்கடவுளே திருக்குறளின் சிறப்பை உரைக்கின்றாள்.
- மூலம்
- நாடா முதனான் மறைநான் முகனாவிற்
- பாடா விடைப்பார தம்பகர்ந்தேன்- கூடாரை
- யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாறபின்
- வள்ளுவன் வாயதென் வாக்கு (02)
- பதப்பிரிப்பு
- நாடா முதல் நான்மறை நான்முகன் நாவில்
- பாடா இடைப் பாரதம் பகர்ந்தேன் – கூடாரை
- எள்ளிய வென்றி இலங்கு இலை வேல் மாற பின்
- வள்ளுவன் வாயது என் வாக்கு
- கருத்துரை
- மாறனே(பாண்டிய மன்னனே) படைப்புக்கால முதலிலே நான், நான்முகனுடைய நாவில் இருந்து நான்மறைகளை- நான்குவேதங்களை- பாடினேன். பின் இடைக்காலத்திலே பாரதம் எனும் ஐந்தாம் வேதத்தினை அருளினேன். அதன்பின் கடைசியாக இப்பொழுது தமிழ்வேதமாகிய திருக்குறளை வள்ளுவனின் வாய்மொழி மூலம் என்வாக்காக (வேதவாக்காக) உலகுக்கு நான் உரைத்தேன்.
இதுவே இறுதிவேதம் என்பதுகுறிப்பு; அதாவது இதுவே முழுமைபெற்ற வேதம் என்பதாம். முதல், இடை என்பதை நோக்குக.
இறையனார்
மூலம்
- என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும்
- நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க்- குன்றாத
- செந்தளிர்க் கற்பகத்தின் றெய்வத் திருமலர்போன்ம்
- மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல் (03)
- பதப்பிரிப்பு
- என்றும் புலராது யாணர் நாள் செல்லுகினும்
- நின்று அலர்ந்து தேன் பிலிற்றும் நீர்மையதாய்க் – குன்றாத
- செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம்
- மன் புலவன் வள்ளுவன் வாய்ச் சொல்
- கருத்துரை
- இறையனார் (சிவபெருமான்) கூறிய பாடல்.
இங்குத் தெய்வப்புலவரின் பாடலைக் கற்பகமரத்தின் தெய்வமலர் என்று அதனுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றார்.
- கற்பகப்பூ என்றும் வாடாதது;அதுபோல் அவர் வாய்ச்சொல்லான திருக்குறளும் என்றும் வாடாதது,அதாவது புதியது, புத்தழகு உடையது.
- நெடுங்காலம் சென்றாலும் கற்பகப்பூ தன்னழகு கெடாது நின்று மலர்ந்து தேன் சொரியும் தன்மையை உடையது. திருக்குறளும் காலத்தால் அழியாதது; தன்னழகு கெடாதது என்றும் பொருந்தும் கருத்துக்களை உடையது; இனிய சுவையான மருந்தனைய கருத்துக்களைத்தரும் தன்மைகொண்டது.
- குறையில்லாத சிவந்த தளி்ர்களை(கொழுந்துகளை) உடையது கற்பகத்தரு (தரு=மரம்)அதுபோல் செஞ்சொற்களைக்கொண்டது திருக்குறள்.
- கற்பகமலர் தெய்வத்திருமலர். திருக்குறளும் தெய்வத் திருக்குறள்.
மிகஅழகான ஒப்புமை.
உக்கிரப் பெருவழுதியார்
- மூலம்
- நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
- றான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த- நூன்முறையை
- வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ்சஞ்
- சிந்திக்க கேட்க செவி (04)
பதப்பிரிப்பு
- நான் மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
- தான் மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த – நூல்முறையை
- வந்திக்க சென்னி வாய் வாழ்த்துக நல் நெஞ்சம்
- சிந்திக்க கேட்க செவி
கருத்துரை
- இங்கு வள்ளுவப்பெருமானைப் படைப்புக்கடவுளான பிரம்மனாகக் கூறுகின்றார் உக்கிரப் பெருவழுதியார்.
- நான்முகத்தோனாகிய பிரம்மதேவனே தன்னை மறைத்துக்கொண்டு இவ்வுலகில் வள்ளுவனாய்த்தோன்றி நான்கு வேதங்களின் பொரு்ள்களை அறம், பொருள் இன்பம் எனும் மூன்றுபொருள்களாக இவ்வுலகுக்குத் தந்தான். இந்த நூலாகிய திருமுறையை என் தலைவணங்கட்டும்; என் வாய் வாழ்த்தட்டும்; என் நெஞ்சம் சிந்திக்க அதாவது, தியானிக்கட்டும்; என் செவியானது கேட்டுக்கொண்டே இருக்கட்டும்.
கபிலர்
மூலம்
- தினையளவு போதாச் சிறுபுன் னீர்நீண்ட
- பனையளவு காட்டும் படிததான்- மனையளகு
- வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
- வெள்ளைக் குறட்பா விரி (05)
பதப்பிரிப்பு
தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு
வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி (௫)
(அளகு= பறவை; வள்ளை= பெண்கள், நெல் குற்றும்போது பாடும் உலக்கைப்பாட்டு வள்ளைப்பாட்டு; வெள்ளை- வெண்பா)
கருத்துரை
- வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது? என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோலாம் என்க.
பரணர்
மூலம்
- மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்
- ஞால முழுதும் நயந்தளந்தான்- வாலறிவின்
- வள்ளுவரும் தங்குறள்வெண் பாவடியால் வையத்தா
- ருள்ளுவவெல் லாமளந்தா ரோர்ந்து (06)
பதப்பிரிப்பு
- மாலும் குறளாய் வளர்ந்து இரண்டு மாண் அடியால்
- ஞாலம் முழுதும் நயந்து அளந்தான் – வால் அறிவின்
- வள்ளுவரும் தம் குறள் வெண்பா அடியால் வையத்தார்
- உள்ளுவ எல்லாம் அளந்தார் ஓர்ந்து
கருத்துரை
- இப்பாடலில் வள்ளுவப்பெருமானைக் காக்குங்கடவுளாகிய திருமால் எனக்கூறுகின்றார் பரணர். திருமால் வாமனாவதாரத்தில், திரிவிக்கிரமாவதாரத்தில் குறளனாய்த் தோன்றிப் பின் வளர்ந்து தன்னுடைய திருவடிகள் இரண்டால், இந்த உலகம் எல்லாவற்றையும் அளந்தான். அதேபோல் வள்ளுவரும் தன்னுடைய மெய்யறிவினால், தம் குறள்வெண்பா அடிகள் இரண்டைக்கொண்டு இந்த உலகத்தாரால் நினைக்கப் பட்டவற்றையெல்லாம் ஆராய்ந்து அளந்தார்; அதாவது அதுபற்றித்தெளிவான கருத்தை விளக்கமாகக் கூறியருளினார் என்பதாம்.
இங்கு வள்ளுவப்பெருமானைக் காக்கும் கடவுளாகிய திருமால் என்றும், அவரை அவதாரம் என்றும் கூறுகின்றார்.
நக்கீரர்
- தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளா
- லானா வறமுதலா வந்நான்கு- மேனோர்க்
- கூழி னுரைத்தாற்கு மொண்ணீர் முகிலுக்கும்
- வாழியுல கென்னாற்று மற்று (07)
பதப்பிரிப்பு
- தானே முழுதுணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்
ஆனா அறம்முதலா அந்நான்கும் – ஏனோர்க்கு
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழிஉலகு என்ஆற்றும் மற்று - (தண்=குளிர்ச்சி; வெண்குறள்=குறள்வெண்பா; ஆனா=நீங்காத/விட்டுப் பிரியாத; நான்கு= அறம் பொருள் இன்பம் வீடு; ஏனோர்=அறியாத பிறர்; ஊழ்=முறை; ஒண்ணீர்= ஒள்ளிய நீரை; முகில்= மேகம்; என்ஆற்றும்= என்ன செய்யும், பிரதியுபகாரமாக.)
கருத்துரை
தாமே எல்லாவற்றையும் அறிந்து, குளிர்ந்த தமிழால் ஆன குறள் வெண்பாவினால் நீங்காத அறம் முதலான நான்கினையும்- அதாவது, அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கினையும்- அதனை அறியாதார்க்கு முறையாக உரைத்த வள்ளுவப் பேராசானுக்கும், உயிர்காக்கும் நீரை மழையாகப் பொழியும் மேகத்திற்கும் இந்த உலகம் என்ன கைம்மாறினைச் செய்யமுடியும், எதுவும் செய்ய முடியாது. ஆகையால், அவரும் அம்மேகமும் இந்த உலகும் வாழ்க எனவாழ்த்தி வணங்குவோம்!
மாமூலனார்
- அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின்
- றிறந்தெரிந்து செப்பிய தேவை- மறந்தேயும்
- வள்ளுவ னென்பானோர் பேதை யவன்வாய்ச்சொற்
- கொள்ளா ரறிவுடை யார். (08)
பதப்பிரிப்பு
அறம் பொருள் இன்பம் வீடு என்னும் அந்நான்கின்
திறம் தெரிந்து செப்பிய தேவை – மறந்தேயும்
வள்ளுவன் என்பான் ஓர்பேதை அவன் வாய்ச்சொல்
கொள்ளார் அறிவுடையார்
கருத்துரை
அறம் பொருள் இன்பம் வீடு என்னும் அந்த நான்கு உறுதிப்பொருள்களின் தன்மையைத் தெரிந்து தெளிவாகச் சொல்லியருளிய தெய்வத்தை, மறந்துபோயாகிலும் அவரை மனிதனாகக் கருதி, வள்ளுவன் என்று கூறினால் அவ்வாறு கூறுபவன் ஒரு பேதை (முட்டாள்) ஆவான். அறிவுடையார் அவன் கூற்றை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். (வள்ளுவர் தெய்வப்பிறவி கீதை உரைத்த ‘கண்ணன்’ போன்று ஓர்அவதாரம்! மூடர்கள் வேண்டுமானால் அவரை ‘மனிதன்’ என்று பெயரிட்டு அழைக்கலாம் என்பது கருத்து.)
கல்லாடர்
ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனி
னன்றென்ப வாறு சமயத்தார் – நன்றென
வெப்பா லவரு மியைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி (௯)
ஒன்றே பொருள் எனின் வேறு என்ப வேறு எனின்
நன்று என்ப ஆறு சமயத்தார் – நன்று என
எப்பாலவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் பொழிந்த மொழி. (09)
கருத்துரை
உலகில் உள்ளவை ஆறு சமயங்கள். அவ்வறுவகை மதத்தினரும், பொருள் ஒன்று என ஒருவர் கூறினால், மற்றொருவர் அதனை மறுத்து, ஒன்று இல்லை வேறு என்று கூறுவார்கள். பிறிதொருவர் வேறு என்று கூறினால், இல்லை அதுவன்று என்பார்கள்! இவ்வாறு தாம் கூறும் கருத்தில் ஒருவரோடு ஒருவர் முரண்பட்டு நிற்பர் ஆறுவகைச்சமயத்தார். ஆனால், எவ்வகைச் சமயத்தாரும் வள்ளுவனார் முப்பாலில் மொழிந்தவற்றை, முரண்படாமல், நன்று என மனமிசைந்து ஒத்துக்கொள்வார்கள். அப்படிப்பட்ட சிறப்புடையது அருங்குறள் என்பதாம். அதாவது, அனைத்துச் சமயத்தினரும் ஏற்றுப் போற்றுவது திருக்குறள் என்பதாம்.
சீத்தலைச் சாத்தனார்
மும்மலையு முந்நாடு முந்நதியு முப்பதியு
மும்முரசு முத்தமிழு முக்கொடியு – மும்மாவுந்
தாமுடைய மன்னர் தடமுடிமேற் றாரன்றோ
பாமுறைதேர் வள்ளுவர்முப் பால். (௰)
மும் மலையும் முந் நாடும் முந் ்நதியும் முப் பதியும்
மும் முரசும் முத் தமிழும் முக் கொடியும் – மும் மாவும்
தாம் உடைய மன்னர் தட முடி மேல் தார் அன்றோ
பா முறை தேர் வள்ளுவர் முப் பால். (10)
கருத்துரை
சேர, சோழ, பாண்டியர்கள் மூன்று மலைகளைக் கொண்டவர்கள். (அவை சேரனுக்குக் கொல்லிமலையும், சோழனுக்கு நேரிமலையும், பாண்டியனுக்குப் பொதிகை மலையும் ஆம்) அவர்கள் முந்நாடு உடையவர்கள். (சேரனுக்குச்சேரநாடு சோழனுக்குச் சோணாடு, பாண்டியனுக்குப் பாண்டிநாடு) அவர்கள் மூன்று ஆறு உடையவர்கள்.(சேரனது ஆன்பொருநை, சோழனது காவிரி, பாண்டியனது வையை). அவர்கள் மூன்று தலைநகரங்கள் கொண்டவர்கள். சேரருக்குக் கருவூராம் வஞ்சி, சோழருக்கு உறையூர், பாண்டியருக்கு மதுரை) அவர்கள் மூன்று முரசுகளை உடையவர்கள்.(அவை மங்கல முரசு, வெற்றி முரசு, கொடை முரசு).
அவர்கள் மூன்று தமிழ் உடையவர்கள். (அவை இயல் இசை நாடகம் என்பனவாம்.) அவர்கள் முக்கொடி உடையவர்கள் (சேரனுக்கு விற்கொடி, சோழனுக்குப் புலிக்கொடி, பாண்டியருக்கு மீன் கொடி).
அவர்கள் மூன்று குதிரைகள் கொண்டவர்கள். (சேரனின் குதிரை, கனவட்டம், சோழனின் புரவி, பாடலம், பாண்டியர் பரி, கோரம் என்பனவாம்). இத்தகைய சிறப்புகளைக் கொண்ட(மும்மலை, முந்நாடு, முந்நதி, முப்பதி, மும்முரசு, முத்தமிழ், முக்கொடி, மும்மா) சேர சோழ பாண்டியர் ஆகிய மூன்று மன்னர்களின் பெருமை மிக்கமுடிமேல் அணிகின்ற மாலை எது தெரியுமா?
அதுதான் மூன்று பால்களையுடைய(அறம், பொருள், காமம்) திருக்குறள் எனும் தமிழ்ப் பாமாலை என்கின்றார், மூன்றுமன்னர்களையும் நன்குஅறிந்த சீத்தலைச் சாத்தனார்.
மருத்துவன் தாமோதரனார்
சீந்திநீர்க் கண்டம் தெறிசுக்குத் தேன்அளாய்
மோந்தபின் யார்க்கும் தலைக்குத்தில் – காந்தி
மலைக்குத்தும் மால்யானை வள்ளுவர் முப்பாலால்
தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு (11)
கருத்துரை
தன்பகை எனக்கோபித்து வெகு்ண்டு, மலையைக் குத்துகின்ற பெரிய களிறு போலுள்ள மன்னனே! சீந்திநீர்ச் சருக்கரையையும் சிதைக்கப்பட்ட சுக்கையும், தேனோடு கலந்து மோந்தபின்னால், தலைக்குத்து அதாவது தலைவலி உடையோர் யாராயினும் அவர்க்குத் தலைவலி தீர்ந்து போகும். திருவள்ளுவர் அருளிய திருக்குறளினாலே சீத்தலைச் சாத்தனார்க்குத் தலைக்குத்து/ தலைவலி தீர்ந்து போனது அதாவது இல்லாமல் போயிற்று.
நாகன் தேவனார்
தாளார் மலர்ப்பொய்கை தாம்குடைவார் தண்ணீரை
வேளாது ஒழிதல் வியப்பன்று – வாளாதாம்
அப்பால் ஒருபாவை ஆய்பவோ வள்ளுவனார்’
முப்பால் மொழிமூழ்கு வார் (12)
கருத்துரை
நாளம் எனப்படும் தண்டோடு பொருந்திய தாமரைமலர்களை உடைய பொய்கையில்/ குளத்தில் மூழ்கி நீராடுவார் வேறு தண்ணீரை விரும்பாது போதல் வியப்பன்று/ஆச்சரியமன்று. அதுபோல வள்ளுவனாரின் முப்பால் எனும் திருக்குறள் நூலில் தோய்ந்தவர்/ மூழ்கியவர் அதற்கு அப்பால் வேறொரு பாவினை/ பாட்டை விரும்புவார்களா? விரும்ப மாட்டார்கள். இதுவே உண்மையில் வியப்பைத்தருவதாம்.
அரிசில்கிழார்
- பரந்த பொருள் எல்லாம் பாரறிய வேறு
- தெரிந்து திறந்தொறும் சேரச் – சுருங்கிய
- சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்
- வல்லார்ஆர் வள்ளுவர்அல் லால் (13)
பொன்முடியார்
- கான்நின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன்
- கூநின்று அளந்த குறளென்ப – நூல்முறையான்
- வான்நின்று மண்ணின்று அளந்ததே வள்ளுவனார்
- தாம்நின்று அளந்த குறள் (14)
கோதமனார்
- ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
- போற்றி யுரைத்துஏட்டின் புறத்தெழுதார் – ஏட்டெழுதி
- வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
- சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று (15)
நத்தத்தனார்
- ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங்குறளும்
- பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின் – போயொருத்தர்
- வாய்கேட்க நூலுளவோ மன்னுதமிழ்ப் புலவ
- ராய்க்கேட்க வீற்றிருக்க லாம் (16)
முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
- உள்ளுதல் உள்ளி உரைத்தல் உரைத்ததனைத்
- தெள்ளுதல் அன்றே செயற்பால – வள்ளுவனார்
- முப்பாலின் மிக்க மொழியுண்டு எனப்பகர்வார்
- எப்பா வலரினும் இல் (17)
ஆசிரியர் நல்லந்துவனார்
- சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும்
- போற்றி உரைத்த பொருள் எல்லாம் – தோற்றவே
- முப்பால் மொழிந்த முதற்பா வலரொப்பார்
- எப்பா வலரினும் இல் (18)
கீரந்தையார்
- தப்பா முதற்பாவால் தாம்மாண்ட பாடலினால்
- முப்பாலின் நாற்பால் மொழிந்தவர் – எப்பாலும்
- வைவைத்த கூர்வேல் வழுதி மனம்மகிழத்
- தெய்வத் திருவள் ளுவர் (19)
சிறுமேதாவியார்
- வீடொன்று பாயிரம் நான்கு விளங்கறம்
- நாடிய முப்பத்துமூன்று ஒன்றூழ் – கூடுபொருள்
- எள்ளில் எழுபது இருபதிற்றைந் தின்பம்
- வள்ளுவர் சொன்ன வகை (20)
நல்கூர் வேள்வியார்
- உப்பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான்
- உத்தர மாமதுரைக்கு அச்சென்ப – இப்பக்கம்
- மாதானுபங்கி மறுவுஇல் புலச்செந்நாப்
- போதார் புனற்கூடற்கு அச்சு 921)
தொடித்தலை விழுத்தண்டினார்
- அறம்நான்கு அறிபொருள் ஏழொன்று காமத்
- திறம்மூன்று எனப்பகுதி செய்து – பெறல்அறிய
- நாலும் மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார்
- போலும் ஒழிந்த பொருள் 922)
வெள்ளி வீதியார்
- செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
- பொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே – செய்யா
- அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை
- இதற்குரியர் அல்லாதார் இல் (23)
மாங்குடி மருதனார்
- ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி
- வேதப் பொருளாய் மிகவிளங்கித் – தீதற்றோர்
- உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே
- வள்ளுவர் வாய்மொழி மாண்பு (24)
எறிச்சலூர் மலாடனார்
- பாயிரம் நான்குஇல் லறம்இருபான் பன்மூன்றே
- தூய துறவறம்ஒன் றுஊழாக – ஆய
- அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்துரைத்தார் நூலின்
- திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து (25)
போத்தியார்
- அரசியல் ஐயைந்து அமைச்சியல் ஈரைந்து
- உருவல் அரண்இரண்டு ஒன்றுஒண்கூழ் – இருவியல்
- திண்படை நட்புப் பதினேழ்குடி பதின்மூன்று
- எண்பொருள் ஏழாம் இவை
மோசிகீரனார்
- ஆண்பால் ஏழ்ஆ றிரண்டுபெண்பால் அடுத்தன்பு
- பூண்பால் இருபால்ஓர் ஆறாக – மாண்பாய
- காமத்தின் பக்கம்ஒரு மூன்றாகக் கட்டுரைத்தார்
- நாமத்தின் வள்ளுவனார் நன்கு
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
- ஐயாரும் நூறும் அதிகாரம் மூன்றுமாம்
- மெய்யாய வேதப் பொருள்விளங்கப் – பொய்யாது
- தந்தான் உலகிற்குத் தான்வள் ளுவனாகி
- அந்தாமரை மேல் அயன்
மதுரைத் தமிழ்நாகனார்
- எல்லாப் பொருளும் இதன்பால்உள இதன்பால்
- இல்லாத எப்பொருளும் இல்லையால் – சொல்லால்
- பரந்த பாவால் என்பயன் வள்ளுவனார்
- சுரந்தபா வையத் துணை
பாரதம் பாடிய பெருந்தேவனார்
- எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச்
- செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும் – முப்பாற்குப்
- பாரதஞ் சீராம கதைமனுப் பண்டைமறை
- நேர்வனமற் றில்லை நிகர்
உருத்திர சன்மகண்ணர்
- மணற்கிளைக்க நீர்ஊறும் மைந்தர்கள் வாய்வைத்து
- உணச்சுரக்கும் தாய்முலை ஒண்பால் – பிணக்குஇலா
- வாய்மொழி வள்ளுவர் முப்பால்மதிப் புலவோர்க்கு
- ஆய்தொறும் ஊறும் அறிவு
பெருஞ்சித்திரனார்
- ஏதம்இல் வள்ளுவர் இன்குறள் வெண்பாவினால்
- ஓதிய ஒண்பொருள் எல்லாம் உரைத்ததனால்
- தாதுஅவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த
- வேதமே மேதக் கன
நரிவெரூஉத் தலையார்
- இன்பம் பொருள்அறம் வீடுஎன்னும் இந்நான்கும்
- முன்பு அறியச்சொன்ன முதுமொழிநூல் – மன்பதைகட்கு
- உள்ள அரிதென்று அவைவள் ளுவர்உலகம்
- கொள்ள மொழிந்தார் குறள்
மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழார்
- புலவர் திருவள்ளுவர் அன்றிப் பூமேல்
- சிலவர் புலவர் எனச்செப்பல் – நிலவு
- பிறங்குஒளி மாமலைக்கும் பெயர்மாலை மற்றும்
- கறங்குஇருள் மாலைக்கும் பெயர்
மதுரை அறுவைவணிகன் இளவேட்டனார்
- இன்பமும் துன்பமும் என்னும் இவைஇரண்டும்
- மன்பதைக்கு எல்லாம் மனம்மகிழ – அன்பொழியாது
- உள்ளி உணர உரைத்தாரே ஓதுசீர்
- வள்ளுவர் வாயுறை வாழ்த்து
கவிசாகரப் பெருந்தேவனார்
- பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புநதம்
- ஆவிற்கு அருமுனியா ஆனைக்கு அகரும்பல்
- தேவில் திருமால் எனச்சிறந்த தென்பவே
- பாவிற்கு வள்ளுவர்வெண் பா
மதுரைப்பெருமருதனார்
- அறம்முப்பத் தெட்டு பொருள்எழுபது இன்பத்
- திறம்இருபத் தைந்தால் தெளிய – முறைமையால்
- வேதவிழுப் பொருளை வெண்குறளால் வள்ளுவனார்
- ஓதஅழக் கற்றது உலகு
கோவூர்க் கிழார்
- அறம்முதல் நான்கும் அகலிடத்தோர் எல்லாம்
- திறமுறத் தேர்ந்து தெளியக் – குறள்வெண்பாப்
- பன்னிய வள்ளுவனார் பால்முறைநேர் ஒவ்வாதே
- முன்னை முதுவோர் மொழி
உறையூர் முதுகூற்றனார்
- தேவிற் சிறந்ததிரு வள்ளுவர் குறள்வெண்
- பாவிற் சிறந்திடும்முப் பால்பகரார் – நாவிற்கு
- உயலில்லை சொற்சுவை ஓர்வில்லை மற்றும்
- செயலில்லை என்னும் திரு
இழிகண் பெருங்கண்ணனார்
- இம்மை மறுமை இரண்டும் எழுமைக்கும்
- செம்மை நெறியின் தெளிவுபெற – மும்மையின்
- வீடவற்றின் நான்கின் விதிவழங்க வள்ளுவனார்
- பாடினர் இன்குறள்வெண் பா
செயிர்க் காவிரியார் மகனார் சாத்தனார்
- ஆவனவும் ஆகாதனவும் அறிவுடையார்
- யாவரும் வல்லார் எடுத்தியம்பத் – தேவர்
- திருவள்ளுவர் தாமும் செப்பியவே செய்வார்
- பொருவில் ஒழுக்கம் பூண்டார்
செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார்
- வேதப்பொருளை விரகால் விரித்துலகோர்
- ஓதத் தமிழால் உரைசெய்தார் – ஆதலால்
- உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
- வள்ளுவர் வாய்மொழி மாட்டு
வண்ணக்கஞ் சாத்தனார்
- ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனினிது
- சீரியது என்றொன்றைச் செப்பரிதால் – ஆரியம்
- வேதம் உடைத்து தமிழ்திரு வள்ளுவனார்
- ஓதுகுறட் பாஉடைத் து
களத்தூர்க் கிழார்
- ஒருவர் இருகுறளே முப்பாலின் ஓதும்
- தருமம் முதல்நான்கும் சாலும் – அருமறைகள்
- ஐந்தும் சமயநூல் ஆறும்நம் வள்ளுவனார்
- புந்தி மொழிந்த பொருள்
நச்சுமனார்
- எழுத்துஅசை சீரடி சொற்பொருள் யாப்பு
- வழுக்கில் வனப்பு அணிவண்ணம் – இழுக்கின்றி
- என்றெவர் செய்தன எல்லாம் இயம்பின
- இன்றிவர் இன்குறள்வெண் பா
அக்காரக்கனி நச்சுமனார்
- கலைநிரம்பிக் காண்டற்கு இனிதாகிக் கண்ணின்
- நிலைநிரம்பும் நீர்மைய தேனும் – தொலைவுஇலா
- வான்ஊர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர்முப்
- பால்நூல் நயத்தின் பயன்
நப்பாலத்தனார்
- அறம்தகளி ஆன்ற பொருள்திரி இன்பு
- சிறந்தநெய் செஞ்சொல் தீதண்டு – குறும்பாவா
- வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
- உள்ளிருள் நீக்கும் விளக்கு
குலபதி நயனார்
- உள்ளக் கமலம் மலர்த்தி உளத்துஉள்ள
- தள்ளற்கு அரிய இருள் தள்ளுதலால் – வள்ளுவனார்
- வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரும் ஒக்கும்எனக்
- கொள்ளத் தகுங்குணத்தைக் கொண்டு
தேனிக்குடிக் கீரனார்
- பொய்ப்பால பொய்யேயாய்ப் போயின பொய்அல்லா
- மெயப்பால மெய்யாய் விளங்கினவே – முப்பாலின்
- தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்
- வையத்து வாழ்வார் மனத்து
கொடிஞாழல் மாணிபூதனார்
- அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின்
- திறன்தெரிந்தேம் வீடு தெளிந்தேம் – மறன்எறிந்த
- வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயால்
- கேளா தனவெல்லாம் கேட்டு
கவுணியனார்
- சிந்தைக்கு இனிய செவிக்கினிய வாய்க்கினிய
- வந்த இருவினைக்கு மாமருந்து – முந்திய
- நன்நெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார்
- பன்னிய இன்குறள்வெண் பா
மதுரைப் பாலாசிரியனார்
- வெள்ளி வியாழம் விளங்குஇரவி வெண்திங்கள்
- பொள்என நீக்கும் புறஇருளை – தெள்ளிய
- வள்ளுவர் இன்குறள் வெண்பா அகிலத்தோர்
- உள்இருள் நீக்கும் ஒளி
ஆலங்குடி வங்கனார்
- வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்கும்
- தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால் – தெள்ளமுதம்
- உண்டறிவார் தேவர் உலகடைய உண்ணுமால்
- வண்தமிழின் முப்பால் மகிழ்ந்து
இடைக்காடர்
- கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
- குறுகத் தறித்த குறள்
அவ்வையார்
- அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
- குறுகத் தறித்த குறள்
(திருவள்ளுவமாலை நிறைவு)
திருவள்ளுவமாலை Free Download
- Thiruvalluva Malai PDF Free Download
- திருவள்ளுவமாலை eBook (ePub)
- திருவள்ளுவமாலை Free Download for Kindle (Mobi)