நீத்தல் விண்ணப்பம்
(திருஉத்தரகோசமங்கையில் அருளியது- கட்டளைக் கலித்துறை)
கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல்
உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே. 105
கொள்ளார் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச்செவ்வாய்
விள்ளேன் எனினும் விடுதிகண்டாய் விழுத்தொழுப்பின்
உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே
கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டாண்டதெக் காரணமே. 106
காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய்
வேருறு வேனை விடுதிகண்டாய் விளங்குந்திருவார்
ஊருறை வாய்மன்னும் உத்தரகோசமங்கைக் கரசே
வாருறு பூண்முலை யாள்பங்க என்னை வளர்ப்பவனே. 107
வளர்கின்ற நின்கருணைக்கையில் வாங்கவும் நீங்கியிப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதிகண்டாய் வெண்மதிக்கொழுந்தொன்று
ஒளிர்கின்ற நீள்முடி உத்தரகோசமங்கைக்கரசே
தெளிகின்ற பொன்னுமின் னும் அன்னதோற்றச் செழுஞ்சுடரே. 108
செழிகின்ற தீப்புகு விட்டிலின் சில் மொழியாரில் பல்நாள்
விழுகின்ற என்னை விடுதி கண்டாய் வெறி வாய் அறுகால்
உழுகின்ற பூமுடி உத்தரகோசமங்கைக்கு அரசே
வழிநின்று நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே. 109
மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே
வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி
ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தர கோச மங்கைக்கு அரசே
பொறுப்பார் அன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே. 110
பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு ஒன்று பொத்திக் கொண்ட
மெய்யவனே விட்டிடுதி கண்டாய் விடம் உண்மிடற்று
மையவனே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
செய்யவனே சிவனே சிறியேன் பவம் தீர்ப்பவனே. 111
தீர்க்கின்றவாறு என் பிழையை நின்சீர் அருள் என்கொல்என்று
வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார்விடை உத்தரகோச மங்கைக்கு அரசே
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே. 112
இருதலைக்கொள்ளியன் உள்எறும்பு ஒத்து நினைப்பிரிந்த
விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு
ஒருதலைவா மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
பொருதரு மூவிலைவேல் வலன் ஏந்திப் பொலிபவனே. 113
பொலிகின்ற நின்தாள் புகுதப் பெற்று ஆக்கையைப் போக்கப் பெற்று
மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளிதேர் விளிரி
ஒலிகின்ற பூம்பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே
வலி நின்ற திண்சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே. 114
மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப யான்உன்மணி மலர்த்தாள்
வேறுபட்டேனை விடுதி கண்டாய் வினையேன் மனத்தே
ஊறும் மட்டே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
நீறுபட்டே ஒளி காட்டும் பொன்மேனி நெடுந்தகையே. 115
நெடுந்தகை நீ என்னை ஆட்கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு
விடும் தகையேனை விடுதி கண்டாய் விரவார் வெருவ
அடும்தகை வேல்வல்ல உத்தரகோச மங்கைக்கு அரசே
கடும் தகையேன் உண்ணும் தெள்நீர் அமுதப் பெருங்கடலே. 116
கடலினுள் நாய் நக்கி அங்கு உன் கருணைக் கடலின் உள்ளம்
விடல் அரியேனை விடுதி கண்டாய் விடல் இல் அடியார்
உடல் இலமே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
மடலின் மட்டே மணியே அமுதே என்மது வெள்ளமே. 117
வெள்ளத்துள் நாவற்றி ஆங்கு உன் அருள் பெற்றுத் துன்பத்து இன்றும்
விள்ளக்கிலேனை விடுதி கண்டாய் விரும்பும் அடியார்
உள்ளத்து உள்ளாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
கள்ளத்து உளேற்கு அருளாய் களியாத களி எனக்கே. 118
களிவந்த சிந்தையோடு உன் கழல் கண்டும் கலந்தருள
வெளிவந்திலேனை விடுதி கண்டாய் மெய்ச் சுடருக்கு எல்லாம்
ஒளிவந்த பூம்கழல் உத்தரகோச மங்கைக்கு அரசே
அளிவந்த எந்தைபிரான் என்னை ஆளுடை என் அப்பனே. 119
என்னை அப்பா அஞ்சல் என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன்
மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே
உன்னை ஒப்பாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும் பொருளே. 120
பொருளே தமியேன் புகல் இடமே நின் புகழ் இகழ்வார்
வெருளே எனை விட்டிடுதி கண்டாய் மெய்ம்மையார் விழுங்கும்
அருளே அணி பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே
இருளே வெளியே இகம் பரம் ஆகி இருந்தவனே. 121
இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்னின் அல்லால்
விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதாய்
அருந்தினனே மன்னும் உத்திரகோச மங்கைக்கு அரசே
மருந்தினனே பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே. 122
மடங்கஎன் வல்வினைக் காட்டை நின்மன் அருள் தீக் கொளுவும்
விடங்க என்தன்னை விடுதிகண்டாய் என் பிறவியை வேர்
ஒடுங்களைந்து ஆண்டுகொள் உத்தரகோச மங்கைக்கு அரசே
கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே. 123
கொம்பர் இல்லாக் கொடிபோல அலமந்தனன் கோமளமே
வெம்புகின்றேனை விடுதிகண்டாய் விண்ணர் நண்ணுகில்லா
உம்பர் உள்ளாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
அம்பரமே நிலனே அனல் காலொடு அப்பு ஆனவனே. 124
ஆனைவெம் போரில் குறும் தூறு எனப்புலனால் அலைப்புண்
டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினையேன் மனத்துத்
தேனையும் பாலையும் கன்னலையும் அமுத்தையும் ஒத்து
ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண்மையனே. 125
ஒண்மையனே திருநீற்றை உத்தூளித்து ஒளி மிளிரும்
வெண்மையனே விட்டிடுதி கண்டாய் மெய் அடியவர்கட்கு
அண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு அறிதற்கு அரிதாம்
பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலிப் பெற்றியனே. 126
பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்கும் அன்பின்
வெற்று அடியேனை விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன்
மற்று அடியேன் தன்னைத் தாங்குநர் இல்லை என்வாழ்முதலே
உற்று அடியேன் மிகத் தேறி நின்றேன் எனக்கு உள்ளவனே. 127
உள்ளவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி
வெள்ளன் அலேனை விடுதி கண்டாய் வியன் மாத்தடக்கைப்
பொள்ளல் நல் வேழத்து விரியாய் புலன் நின் கண் போதல் ஒட்டா
மெள்ளனவே மொய்க்கும் நெய்க்குடம் தன்னை எறும்பு எனவே. 128
எறும்பிடை நாங்கூழ் எனப்புலனால் அரிப்புண்டு அலந்த
வெறும் தமியேனை விடுதி கண்டாய் வெய்ய கூற்று ஒடுங்க
உறும் கடிப்போது அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர்
பெறும் பதமே அடியார் பெயராத பெருமையனே. 129
பெருநீர் அறச் சிறுமீன் துவண்டு ஆங்கு நினைப் பிரிந்த
வெருநீர் மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி
வரும்நீர் மடுவுள் மலைச்சிறு தோணி வடிவின் வெள்ளைக்
குருநீர் மதிபொதியும் சடை வானக் கொழு மணியே. 130
கொழுமணியேர் நகை யார்கொங்கைக் குன்றிடைச் சென்றுகுன்றி
விழுமடி யேனை விடுதிகண்டாய் மெய்ம் முழுதுங்கம்பித்து
அழுமடி யாரிடை யார்த்துவைத் தாட்கொண் டருளியென்னைக்
கழுமணி யேயினனுங் காட்டுகண்டாய் நின் புலன்கழலே. 131
புலன்கள் திகைப்பிக்க யானுந் திகைத்திங்கொர் பொய்ந்நெறிக்கே
விலங்குகின் றேனை விடுதிகண்டாய் விண்ணும் மண்ணுமெல்லாய்
கலங்குமுந் நீர்நஞ் சமுதுசெய் தாய்க்கு கருணாகரனே
துலங்குகின்றேனடி யேனுடையாயென் தொழுகுலமே. 132
குலங்களைந் தாய்களைந் தாய்என்னைக் குற்றங்கொற் றச்சிலையாம்
விலங்கலெந் தாய்விட் டிடுதிகண்டாய்பொன்னின் மின்னுகொன்றை
அலங்கலந் தாமரை மேனியிப் பாவொப்பி லாதவனே
மலங்களைத் தாற்கழல் வன்தயிரிற்பொரு மத்துறவே. 133
மத்தறு தண்தயி ரிற்புலன் தீக்கது வக்கலங்கி
வித்தறு வேனை விடுதிகண்டாய் வெண்டலையிலைச்சிக்
கொத்தறு போது மிலைந்து குடர்நெடு மாலைசுற்றித்
தத்தறு நீறுட னாரச் செஞ்சாந்தணி சச்சையனே. 134
சச்சையனே மிக்க தண்புனல் விண்கால் நிலம்நெருப்பாம்
விச்சையனே விட்டிடுதிகண்டாய் வெளியாய் கரியாய்
பச்சையனே செய்ய மேனியனெ யொண்பட அரவக்
கச்சையனே கடந்தாய்தடந்தாள அடற்கரியே. 135
அடற்கரி போல்ஐம்புலன்களுக்கஞ்சி அழிந்த என்னை
விடற்கரியாய் விட்டிடுதி கண்டாய் விழுத்தொண்டர்கல்லால்
தொடற்கரியாய் சுடர் மாமணியே கடு தீச்சுழலக்
கடற்கரி தாயெழு நஞ்சமு தாக்குங் கறைக்கண்டனே. 136
கண்டது செய்து கருணைமட்டுப்பரு கிக்களித்து
மிண்டுகின்றேனை விடுதிகண்டாய் நின் விரைமலர்த்தாள்
பண்டுதந்தாற்போற் பணித்துப் பணிசெயக் கூவித்தென்னைக்
கொண்டெனெந் தாய்களை யாய் களையாய குதுகுதுப்பே. 137
குதுகுதுப்பின்றி றென்குறிப்பேசெய்து நின்குறிப்பில்
விதுவிதுப் பேனை விடுதிகண்டாய்விரை யார்ந்தினிய
மதுமதுப் போன்றென்னை வாழைப்பழத்தின் மனங்கனிவித்து
எதிர்வதெப் போது பயில்வி கயிலைப் பரம்பரனே. 138
பரம்பரனே நின்பழஅடி யாரொடும் என்படிறு
விரும்பரனே விட்டிடுதி கண்டாய்மென் முயற்கறையின்
அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவியை வாயரவம்
பொரும்பெரு மான்வினை யேன்மனம் அஞ்சிப் பொதும்புறவே. 139
பொதும்புறு தீப்போற் புகைந்தெரியப்புலன் தீக்கதுவ
வெதும்புறுவேனை விடுதி கண்டாய் விரை யார் நறவம்
ததும்புமந் தாரத்தில் தாரம் பயின்றுமந் தம்முரல்வண்டு
அதும்புங் கொழுந்தேன் அவிர்சடை வானத் தடலரைசே. 140
அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கஞ்ச லென்னினல்லால்
விரைசேர் முடியாய் விடுதிகண்டாய் வெண் ணகைக்கருங்கண்
திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் பதப்புயங்கா
வரைசேர்ந் தடர்ந்தென்ன வல்வினை தான் வந் தடர்வனவே. 141
அடர்புலனால் நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல் நல்லாரவர்தம்
விடர்விட லேனை விடுதிகண்டாய் விரிந் தேயெரியுஞ்
சுடரனை யாய் சுடு காட்டரசே தொழும் பர்க்கமுதே
தொடர்வரி யாம் தமியேன் தனி நீக்குந் தனித்துணையே. 142
தனித்துணை நீநிற்க யான் தருக்கித்தலை யால் நடந்த
வினைத்துணை யேனை விடுதிகண்டாய் வினை யேனுடைய
மனத்துணை யேஎன்தன் வாழ்முதலே எனக் கெய்ப்பில்வைப்பே
தினைத்துணை யேனும் பொறேன் துயராக்கையின் திண்வலையே. 143
வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின் வலையிற்பட்டு
மிலைத்தலைந் தேனை விடுதிகண்டாய் வெண்மதியின் ஒற்றைக்
கலைத்தலை யாய் கருணாகரனே கயிலாய மென்னும்
மலைத்தலை வாமலை யாம்மணவாள என் வாழ்முதலே. 144
முதலைச் செவ் வாய்ச்சியர் வேட்கைவெந்நீரிற் கடிப் பமூழ்கி
விதலைச் செய்வேனை விடுதிகண்டாய் விடக் கூன்மிடைந்த
சிதலைச் செய்காயம் பொறேன் சிவனே முறையோ முறையோ
திதலைச் செய்பூண்முலை மங்கைபங்கா என்சிவகதியே. 145
கதியடி யேற்குன் கழல்தற்தருளவும் ஊன்கழியா
விதியடி யேனை விடுதிகண்டாய் வெண்தலைமுழையிற்
பதியுடை வாளரப் பார்த்திறை பைத்துச் சுருங்க அஞ்சி
மதிநெடு நீரிற் குளித்தொளிக் குஞ்சடை மன்னவனே. 146
மன்னவனே யொன்று மாற்றியாச்சிறியேன் மகிழ்ச்சி
மின்னவனே விட்டிடுதி கண்டாய் மிக்க வேதமெய்ந்நூல்
சொன்னவனே சொற் கழிந்தவனே கழியாத் தொழும்பர்
முன்னவனே பின்னும் ஆனவனேயிம் முழுதையுமே. 147
முழுதயில் வேற்கண்ணியரென்னும் மூரித் தழல்முழுதும்
விழுதனை யேனை விடுதிகண்டாய் நின்வெறி மலர்த்தாள்
தொழுதுசெல்வான்நல்தொழும்பரிற் கூட்டிடு சோத்தெம்பிரான்
பழுதுசெய்வேனை விடேலுடையாய் உண்னைப் பாடுவனே. 148
பாடிற்றிலேன் பணியேன் மணிநீயொளித் தாய்க்குப்பச்சூன்
வீடிற்றிலேனை விடுதிகண்டாய் வியற் தாங்கலறித்
தேடிற்றிலேன் சிவனெவ்விடத்தான்எவர் கண்டனரென்று
ஓடிற்றிலேன் கிடந்துள்ளுருகேன் நின்றுழைத்தனனே. 149
உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயினொப்பாய்
விழைதரு வேனை விடுதிகண்டாய் விடின் வேலைநஞ்சுண்
மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன்
பழைதரு மாபரனேன்றென் றறைவன் பழிப்பினையே. 150
பழிப்பில்நின் பாதப் பழந்தொழும் பெய்தி விழப்பழித்து
விழித்திருந் தேனை விடுதிகண்டாய் வெண்மணிப்பணிலம்
கொழித்துமந்தார மந்தாகினி நுந்தும்பந் தப்பெருமை
தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர் தரு தாரவனே. 151
தாரகை போலும் தலைத்தலை மாலைத் தழலரப்பூண்
வீரஎன் தன்னை விடுதிகண்டாய் விடிலென்னைமிக்கார்
ஆரடி யானென்னின் உத்தரகோச மங்கைக்கரசின்
சீரடி யாரடி யானென்று நின்னைச் சிரிப்பிப்பனே. 152
சிரிப்பிப்பின் சீறும் பிழைப்பைத் தொழும்பையும் ஈசற் கென்று
விரப்பிப்ப னென்னை விடுதிகண்டாய் விடின் வெங்கரியின்
உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன்நஞ்சூண்பிச்சன் ஊர்ச்சுடுகாட்டு
எரிப்பிச்சன் என்னையும்ஆளுடைப் பிச்சனென் றேசுவனே. 153
ஏசினும் யானுன்னை யேத்தினும் என்பிழைக்கே குழைந்து
வேசறு வேனை விடுதிகண்டாய் செம்பவள வெற்பின்
தேகடை யாயென்னை ஆளுடையாய் சிற் றுயிர்க் கிரங்கிக்
காய்சின ஆலமுண்டாய் அமுதுண்ணக் கடையவனே. 154
திருவாசகம்/நீத்தல் விண்ணப்பம்
மாணிக்கவாசகர்:
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.
Buy Book From amazon:
Thiruvasagam Tamil Book Hardcover – 2017
by SWAMI CHIDBHAVANANDA