நமச்சிவாயத் திருப்பதிகம்
வழித்துணை நன்றாக அமைய நமச்சிவாயத் திருப்பதிகம் பாடப்படுகிறது.
- சொற்றுணை வேதியன் சோதி வானவன்
- பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக்
- கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
- நற்றுணை யாவது நமச்சி வாயவே
- பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
- ஆவினுக்கு அருங்கலம் அரனஞ் சாடுதல்
- கோவினுக்கு அருங்கலம் கோட்டமில்லது
- நாவினுக்கு அருங்கலம் நமச்சி வாயவே
- விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
- உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
- பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
- நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே
- இடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும்
- விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
- அடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளின் நாமுற்ற
- நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே
- வெந்தநீறு அருங்கலம் விரதி கட்கெலாம்
- அந்தணர்க்கு அருங்கலம் அருமறை யாறங்கலம்
- திங்களுக்கு அருங்கலம் திகழு நீள்முடி
- நங்களுக்கு அருங்கலம் நமச்சி வாயவே
- சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
- நலமிலன் நாடொறும் நல்குவான் நலன்
- குலமில ராகிலும் குலத்துக் கேற்பதோர்
- நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே
- வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்
- கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
- ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
- நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே
- இல்லக விளக்கது இருள்கெ டுப்பது
- சொல்லக விளக்கது சோதி யுள்ளது
- பல்லக விளக்கது பலருங் காண்பது
- நல்லக விளக்கது நமச்சி வாயவே
- முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
- தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
- அந்நெறி யேசென் றடைந்த வர்க் கெலாம்
- நன்னெறி யாவது நமச்சி வாயவே
- மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
- பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
- நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்து
- ஏத்தவல் லார்தமக்கு இடுக்க னில்லையே