பாரதியார் கவிதைகள் | Bharathiyar Kavithaigal
தனிப் பாடல்கள்
1 காலைப்பொழுது
காலைப் பொழுதினிலே கண்விழித்து மேனிலை மேல்
மேலைச் சுடர்வானை நோக்கி நின்றோம் விண்ணகத்தே.
கீழ்த்திசையில் ஞாயிறுதான் கேடில் சுடர் விடுத்தான்;
பார்த்த வெளியெல்லாம் பகலொளியாய் மின்னற்றே.
தென்னை மரத்தின் கிளையிடையே தென்றல் போய்
மன்னப் பருந்தினுக்கு மாலை யிட்டுச் சென்றதுவே.
தென்னை மரக்கிளைமேற் சிந்தனையோ டோர் காகம்
னவன்னமுற வீற்றிருந்து வானைமுத்த மிட்டதுவே.
தென்னைப் பசுங் கீற்றைக் கொத்திச் சிறு காக்கை
மின்னுகின்ற தென்கடலை நோக்கி விழித்ததுவே.
வன்னச் சுடர் மிகுந்த வானகத்தே தென் திசையில்
கன்னங் கருங்காகக் கூட்டம்வரக் கண்ட தங்கே.
கூட்டத்தைக் கண்டஃது கும்பிட்டே தன்னருகோர்
பாட்டுக் குருவிதனைப் பார்த்து நகைத்ததுவே.
சின்னக் குருவி சிரிப்புடனே வந்தாங்கு
கன்னங் கருங்காக்கை கண்ணெதிரே யோர்கிளைமேல்
வீற்றிருந்தே“கிக் கிக்கீ;காக்காய் நீ விண்ணிடையே
போற்றியெதை நோக்குகிறாய்? கூட்டமங்குப் போவ தென்னே?:”
என்றவுட னே காக்கை-“என் தோழா! நீ கேளாய்,
மன்றுதனைக் கண்டே மனமகிழ்ந்து போற்றுகிறேன்.”
என்றுசொல்லிக் காக்கை இருக்கையிலே ஆங்கணோர்
மின்திகழும் பச்சைக் கிளிவந்து வீற்றிருந்தே.
“நட்புக் குருவியே ஞாயிற்’றிளவெயிலில்
கட்புலனுக் கெல்லாம் களியாகத் தோன்றுகையில்,
நும்மை மகிழ்ச்சிடன் நோக்கியிங்கு வந்திட்டேன்!
அம்மவோ!காகப் பெருங்கூட்ட மஃதென்னே?”
என்று வினவக் குருவிதான் இஃதுரைக்கும்;-
“நன்றுநீ கேட்டாய்,பசுங்கிளியே!நானுமிங்கு.
மற்றதனை யோர்ந்திடவே காக்கையிடம் வந்திட்டேன்;
கற்றறிந்த காக்காய்,கழறுக நீ!” என்றதுவே.
அப்போது காக்கை,“அருமையுள்ள தோழர்களே!
செப்புவேன் கேளீர்,சில நாளாக் காக்கையுள்ளே.
நேர்ந்த புதுமைகளை நீர்கேட்டறியீ ரோ?
சார்ந்துநின்ற கூட்டமங்கு சாலையின்மேற் கண்டீரே?
மற்றந்தக் கூட்டத்து மன்னவனைக் காணீரே?
கற்றறிந்த ஞானி கடவுளையே நேராவான்;
ஏழுநாள் முன்னே இறைமகுடந் தான் புனைந்தான்;
வாழியவன் எங்கள் வருத்தமெல்லாம் போக்கிவிட்டான்.
சோற்றுக்குப் பஞ்சமில்லை; போரில்லை;துன்பமில்லை;
போற்றற் குரியான் புதுமன்னன்,காணீரோ?”
என்றுரைத்துக் காக்கை இருக்கையிலே அன்னமொன்று
தென்திசையி னின்று சிரிப்புடனே வந்ததங்கே.
அன்னமந்தத் தென்னை யருகினிலோர் மாடமிசை
வன்னமுற வீற்றிருந்து,-“வாழ்க,துணைவரே!
காலை யிளவெயிலிற் காண்பதெலாம் இன்பமன்றோ?
சால நுமைக் கண்டுகளித்தேன் சருவிநீர்,
ஏதுரைகள் பேசி யிருக்கின்றீர்?” என்றிடவே
போதமுள்ள காக்கை புகன்றதந்தச் செய்தியெல்லாம்.
அன்னமிது கேட்டு மகிழ்ந்துரைக்கும்;-“ஆங் காணும்!
மன்னர் அறம்புரிந்தால்,வையமெல்லாம் மாண்புபெறும்.
ஒற்றுமையால் மேன்மையுண்டாம்; ஒன்றையொன்று துன்பிழைத்தல்
குற்றமென்று கண்டால் குறைவுண்டோ வாழ்வினுக்கே?”
என்று சொல்லி அன்னம் பறந்தாங்கே ஏகிற்றால்;
மன்று கலைந்து மறைந்தனவப் புட்களெல்லாம்.
காலைப் பொழுதினிலே கண்டிருந்தோம் நாங்களிதை;
ஞால மறிந்திடவே நாங்களிதைப் பாட்டிசைத் தோம்.
2 அந்திப் பொழுது
பாரதியார் கவிதைகள்| தனிப் பாடல்கள்
காவென்று கத்திடுங் காக்கை-என்தன்
கண்ணுக் கினிய கருநிறக் காக்கை,
மேவிப் பலகிளை மீதில்-இங்கு
விண்ணிடை அந்திப் பொழுதினைக் கண்டே,
கூவித் திரியும் சிலவே;-சில
கூட்டங்கள் கூடித் திசைதொறும் போகும்.
தேவி பராசக்தி யன்னை -வின்ணிற்
செவ்வொளி காட்டிப் பிறைதலைக் கொண்டாள்.
தென்னை மரக்கிளை மீதில்-அங்கோர்
செல்வப் பசுங்கிளி கீச்சிட்டுப் பாயும்
சின்னஞ் சிறிய குருவி-அது
‘ஜிவ்’ வென்று விண்ணிடை யூசலிட் டேகுட்.
மன்னப் பருந்தொ ரிரண்டு-மெல்ல
வட்ட மிட்டுப்பின் நெடுந்தொலை போகும்,
பின்னர் தெருவிலார் சேவல்-அதன்
பேச்சினி லே“சக்தி வேல்” என்று கூவும்.
செவ்வொளி வானில் மறைந்தே-இளந்
தேநில வெங்கும் பொழிந்தது கண்டீர்!
இவ்வள வான பொழுதில் அவள்
ஏறிவந்தே யுச்சி மாடத்தின் மீது,
கொவ்வை யிதழ்நகை வீச,-விழிக்
கோணத்தைக் கொண்டு நிலவைப் பிடித்தான்.
செவ்விது,செவ்விது,பெண்மை!-ஆ!
செவ்விது,செவ்விது,செவ்விது காதல்!
காதலி னாலுயிர் தோன்றும்;-இங்கு
காதலி னாலுயிர் வீரத்தி லேறும்;
காலி னாலறி வெய்தும்-இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்;
ஆதலி னாலவள் கையைப் -பற்றி
அற்புத மென்றிரு கண்ணிடை யொற்றி
வேதனை யின்றி இருந்தேன்,-அவள்
வீணைக் குரலிலோப் பாட்டிசைத் திட்டாள்.
காதலியின் பாட்டு
கோல மிட்டு விளக்கினை யேற்றிக்
கூடி நின்று பராசக்தி முன்னே
ஓல மிட்டுப் புகழ்ச்சிகள் சொல்வார்
உண்மை கண்டிலர் வையத்து மாக்கள்;
ஞால முற்றும் பராசக்தி தோற்றம்
ஞான மென்ற விளக்கினை யேற்றிக்
கால முற்றுந் தொழுதிடல் வேண்டும்,
காத லென்பதொர் கோயிலின் கண்ணே.
3 நிலாவும் வான்மீனும் காற்றும்
மனத்தை வாழ்த்துதல்
நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோலவெறி படைத்தோம்;
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;
பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ!
தாரகை யென்ற மணித்திரள் யாவையும்
சார்ந்திடப் போமனமே,
சரச் சுவையதி லுறி வருமதில்
இன்புறு வாய்மனமே!
சீர விருஞ்சுடர் மீனொடு வானத்துத்
திங்களையுஞ் சமைத்தே
ஓரழ காக விழுங்கிடும் உள்ளத்தை
ஒப்பதொர் செல்வமுண்டா’
பன்றியைப் போலிங்கு மண்ணிடைச் சேற்றில்
படுத்துப் புரளாதே
வென்றியை நாடியிவ் வானத்தில் ஓட
விரும்பி விரைந்திடுமே;
முன்றலில் ஓடுமோர் வண்டியைப் போலன்று
மூன்றுலகுஞ் சூழ்ந்தே
நன்று திரியும்வி மானத்தைப் போலொரு
நல்ல மனம் படைத்தோம்.
தென்னையின் கீற்றுச் சலசலச வென்றிடச்
செய்துவருங் காற்றே!
உன்னைக் குதிரைகொண் டேறித் திரியுமொர்
உள்ளம் படைத்துவிட்டோம்.
சின்னப் பறவையின் மெல்லொலி கொண்டிங்கு
சேர்ந்திடு நற் காற்றே!
மின்னல் விளக்கிற்கு வானகங் கொட்டுமிவ்
வெட்டொலி யேன் கொணர்ந்தாய்?
மண்ணுல கத்துநல் லோசைகள் காற்றெனும்
வானவன் கொண்டுவந்தான்;
பண்ணி விசைத்தவ வொலிக ளனைத்தையும்
பாடி மகிழ்ந்திடுவோம்.
நண்ணி வருமணி யோசையும்,பின்னங்கு
நாய்கள் குலைப்பதுவும்,
எண்ணுமுன்னே‘அன்னக் காவடிப் பிச்சை’யென்
றேங்கிடு வான் குரலும்,
வீதிக் கதவை அடைப்பதும் கீழ்த்திசை
விம்மிடும் சங்கொலியும்,
வாதுகள் பேசிடு மாந்தர் குரலும்
மதலை யழுங் குரலும்,
ஏதெது கொண்டு வருகுது காற்றிவை
எண்ணி லகப்படுமோ?
சீதக் கதிர்மதி மேற்சென்று பாய்ந்தங்கு
தேனுண்ணு வாய்,மனமே!
4 மழை
திக்குக்கள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம்
சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட
வெட்டி யடிக்குது மின்னல்,-கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம்;-கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையும் இடிய-மழை
எங்ஙனம் வந்ததடா,தம்பி வீரா!
அண்டம் குலுங்குது,தம்பி!-தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்;-திசை
வெற்புக் குதிக்குது;வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்;-என்ன
தெய்விகக் காட்சியை கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!
5 புயற் காற்று
பாரதியார் கவிதைகள்| தனிப் பாடல்கள்
நள வருடம் காத்திகை மாதம் 8ம் தேதி புதன் இரவு
ஒரு கணவனும் மனைவியும்
மனைவி: காற்றடிக்குது,கடல்குமுறுது
கண்ணை விழிப்பாய் நாயகமே!
தூற்றல் கதவு சாளரமெல்லாம்
தொளைத்தடிக்குது, பள்ளியிலே.
கணவன்: வானம் சினந்தது;வையம் நடுங்குது;
வாழி பராசக்தி காத்திடவே!
தீனக்குழந்தைகள் துன்பப்படாதிங்கு
தேவி, அருள்செய்ய வேண்டுகிறோம்.
மனைவி:நேற்றிருந் தோம்அந்த வீட்டினிலே,இந்த
நேரமிருந்தால் என்படுவோம்?
காற்றெனவந்தது கூற்றமிங்கே,நம்மைக்
காத்ததுதெய்வ வலிமையன்றோ?
6 பிழைத்த தென்னந் தோப்பு
பாரதியார் கவிதைகள்| தனிப் பாடல்கள்
வயலிடை யினிலே-செழுநீர்-மடுக் கரையினிலே
அய லெவரு மில்லை-தனியே-ஆறுதல் கொள்ள வந்தேன்.
காற்றடித் ததிலே-மரங்கள்-கணக்கிடத் தகுமோ?
நாற்றி னைப்போலே-சிதறி-நாடெங்கும் வீழ்ந்தனவே.
சிறிய திட்டையிலே,உளதோர்-தென்னஞ் சிறுதோப்பு
வறியவ னுடைமை-அதனை-வாயு பொடிக்க வில்லை
வீழ்ந்தன சிலவாம்-மரங்கள்-மீந்தன பலவாம்;
வாழ்ந்திருக்க வென்றே-அதனை-வாயு பொறுத்து விட்டான்
தனிமை கண்டதுண்டு;-அதில்-சார மிருக்கு தம்மா!
பனிதொலைக்கும் வெயில்,-அது தேம்-பாகு மதுர மன்றோ?
இரவி நின்றது காண்-விண்ணிலே-இன்பவொளித்திரளாய்;
பரவி யெங்கணுமே-கதிர்கள்-பாடிக் களித்தனவே.
நின்ற மரத்திடையே-சிறிதோர்-நிழலினில் இருந்தேன்,
என்றும் கவிதையிலே-நிலையாம்-இன்பம் அறிந்து கொண்டேன்.
வாழ்க பராசக்தி!-நினையே-வாழ்த்திடுவோர் வாழ்வார்;
வாழ்க பராசக்தி!-இதையென்-வாக்கு மறவாதே
7 அக்கினிக் குஞ்சு
பாரதியார் கவிதைகள்| தனிப் பாடல்கள்
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.
8 சாதாரண வருஷத்துத் தூமகேது
தினையின் மீது பனைநின் றாங்கு
மணிச்சிறு மீன்மிசை வளர்வால் ஒளிதரக்
ழ்த்திசை வெள்ளியைக் கேண்மைகொண் டிலகும்
தூம கேதுச் சுடரே,வாராய்!
எண்ணில் பல கோடி யோசனை யெல்லை
எண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால்
புனைந்த நின்னெடுவால் போவதென் கின்றார்.
மண்ணகத் தினையும் வால்கொடு தீண்டி
ஏழையர்க் கேதும் இடர்செயா தேநீ
போதி யென்கின்றார்;புதுமைகள் ஆயிரம்
நினைக்குறித் தறிஞர் நிகழ்த்துகின் றனரால்.
பாரத நாட்டில் பரவிய எம்மனோர்
நூற்கணம் மறந்துபன் னூறாண் டாயின;
உனதியல் அன்னியர் உரைத்தடக் கேட்டே
தெரிந்தனம்;எம்முளே தெளிந்தவர் ஈங்கிலை.
வாராய்,சுடரே!வார்த்தைசில கேட்பேன்;
தீயர்க் கெல்லாம் தீமைகள் விளைத்துத்
தொல்புவி யதனைத் துயர்க்கட லாழ்த்திநீ
போவை யென்கின்றார்; பொய்யோ,மெய்யோ?
ஆதித் தலைவி யாணையின் படிநீ
சலித்திடுந் தன்மையால்,தண்டம் நீ செய்வது
புவியினைப் புனிதமாப் புனைதற் கேயென
விளம்பு கின்றனர் அது மெய்யோ,பொய்யோ?
ஆண்டோர் எழுபத் தைந்தினில் ஒரு முறை
மண்ணைநீ அணுகும் வழக்கினை யாயினும்
இம்முறை வரவினால் எண்ணிலாப் புதுமைகள்
விளையு மென்கின்றார்;மெய்யோ,பொய்யோ?
சித்திகள் பலவும்,சிறந்திடு ஞானமும
மீட்டும் எம்மிடைநின் வரவினால் விளைவதாப்
புகலு கின்றனர்; அது பொய்யோ,மெய்யோ?
9 அழகுத் தெய்வம்
பாரதியார் கவிதைகள்| தனிப் பாடல்கள்
மங்கியதொர் நிலவினிலே கனவிலிது கண்டேன்,
வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை;
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்.
புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்,
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து,
தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்.
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா!
அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்ததேன்.
யோகந்தான் சிறந்ததுவோ? தவம் பெரிதோ?’என்றேன்;
‘யோகமே தவம்,தவமே யோக’மென உரைத்தாள்.
‘ஏகமோ பொருளன்றி இரண்டாமோ?’என்றேன்;
‘இரண்டுமாம்,ஒன்று மாம்,யாவுமாம்’என்றாள்.
‘தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே யுண்டோ?
தாகத்தின் துயர்மழைதான் அறிந்திடுமோ?’என்றேன்.
‘வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான்
விருப்புடனே பெய்குவது வேறாமோ?”என்றாள்.
‘காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ?’என்றேன்.
‘காலமே மதியினுக்கோர் கருவியாம்’என்றாள்.
‘ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ?’என்றேன்;
‘நானிலே ஒன்றிரண்டு பலித்திடலாம்’என்றாள்
‘ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை?’என்றேன்;
‘எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண்’என்றாள்.
‘மூலத்தைச் சொல்லவோ?வேண்டாமோ?’என்றேன்;
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.
10 ஒளியும் இருளும்
பாரதியார் கவிதைகள்| தனிப் பாடல்கள்
வானமெங்கும் பரிதியின் சோதி;
மலைகள் மீதும் பரிதியின் சோதி;
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரையின் மீதும் தருக்களின் மீதும்
கான கத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி;
மானவன்தன் உளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே!
சோதி என்னும் கரையற்ற வெள்ளம்
தோன்றி எங்கும் திரைகொண்டு பாய,
சோதி என்னும் பெருங்கடல்,சோதிச்
சூறை,மாசறு சோதி யனந்தம்,
சோதி என்னும் நிறைவிஃதுலகைச்
சூழ்ந்து நிற்ப,ஒரு தனி நெஞ்சம்
கோதி யன்றதொர் சிற்றிருள் சேரக்
குமைந்து சோரும் கொடுமையி தென்னே!
தேம லர்க்கொர் அமுதன்ன சோதி,
சேர்ந்து புள்ளினம் வாழ்ந்திடும் சோதி,
காம முற்று நிலத்தொடு நீரும்
காற்றும் நன்கு தழுவி நகைத்தே
தாம யங்கநல் லின்புறுஞ் சோதி,
தரணி முற்றும் ததும்பி யிருப்ப,
தீமை கொண்ட புலையிருள் சேர்ந்தோர்
சிறிய நெஞ்சம் தியங்குவ தென்னே!
நீர்ச்சு னைக்கணம் மின்னுற் றிலக,
நெடிய குன்றம் நகைத்தெழில் கொள்ள,
கார்ச்ச டைக்கரு மேகங்க ளெல்லாம்
கனக மொத்துச் சுடர்கொண் டுலாவ,
தேர்ச்சி கொண்டுபல் சாத்திரம் கற்றும்
தெவிட்டொ ணாதநல்லின்பக் கருவாம்
வேர்ச்சு டர்பர மாண்பொருள் கேட்டும்
மெலிவொர் நெஞ்சிடை மேவுதல் என்னே!
11 சொல்
பாரதியார் கவிதைகள்| தனிப் பாடல்கள்
சொல் ஒன்று வேண்டும்,தேவ சக்திகளை
நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்.
தேவர் வருகவென்று சொல்வதோ?-ஒரு
செம்மைத் தமிழ்மொழியை நாட்டினால்,
ஆவ லறிந்துவரு வீர்கொலோ?-உம்மை
யன்றி யொருபுகலும் இல்லையே.
‘ஓம்’என் றுரைத்துவிடிற் போதுமோ?-அதில்
உண்மைப் பொருளறிய லாகுமோ?
தீமை யனைத்துமிறந்தேகுமோ?-என்தன்
சித்தம் தெளிவுநிலை கூடுமோ?
“உண்மை ஒளிர்க’என்று பாடவோ?-அதில்
உங்கள் அருள்பொருந்தக் கூடுமோ?
வண்மை யுடையதொரு சொல்லினால்-உங்கள்
வாழ்வு பெறவிரும்பி நிற்கிறோம்.
“தீயை அகத்தினிடை மூட்டுவோம்”-என்று
செப்பும் மொழிவலிய தாகுமோ?
ஈயைக் கருடநிலை யேற்றுவீர்-எம்மை
என்றுந் துயரமின்றி வாழ்த்துவீர்.
வான மழைபொழிதல் போலவே-நித்தம்
வந்து பொழியுமின்பங் கூட்டுவீர்;
கானை அழித்து மனை கட்டுவீர்-துன்பக்
கட்டுச் சிதறிவிழ வெட்டுவீர்.
விரியும் அறிவுநிலை காட்டுவீர்-அங்கு
வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்:
தெரியும் ஒளிவிழியை நாட்டுவீர்-நல்ல
தீரப் பெருந்தொழிலில் பூட்டுவீர்.
மின்ன லனையதி றல் ஓங்குமே-உயிர்
வெள்ளம் கரையடங்கிப் பாயுமே;
தின்னும் பொருளமுதம் ஆகுமே-இங்குச்
செய்கை யதனில் வெற்றி யேறுமே.
தெய்வக் கனல்விளைந்து காக்குமே-நம்மைச்
சேரும் இருளழியத் தாக்குமே;
கைவைத் ததுபசும்பொன் ஆகுமே-பின்பு
காலன் பயமொழிந்து போகுமே.
“வலிமை,வலிமை”என்று பாடுவோம்-என்றும்
வாழுஞ் சுடர்க்குலத்தை நாடுவோம்;
கலியைப் பிளந்திடக் கை யோங்கினோம்-நெஞ்சில்
கவலை யிருளனைத்தும் நீங்கினோம்.
“அமிழ்தம்,அமிழ்தம்’‘என்று கூறுவோம்-நித்தம்
அனலைப் பணிந்துமலர் தூவுவோம்;
தமிழில் பழமறையைப் பாடுவோம்-என்றும்
தலைமை பெருமை புகழ் கூடுவோம்.
12 கவிதைத் தலைவி
பாரதியார் கவிதைகள்| தனிப் பாடல்கள்
வாழ்க மனைவியாம் கவிதைத் தலைவி!
தினமும்இவ் வுலகில் சிதறியே நிகழும்
பலபல பொருளிலாப் பாழ்படு செய்தியை
வாழ்க்கைப் பாலையில் வளர்பல முட்கள்போல்
பேதை யுலகைப் பேதைமைப் படுத்தும்
வெறுங்கதைத் திரளை,வெள்ளறி வுடைய
மாயா சக்தியின் மகளே!மனைக்கண்
வாழ்வினை வகுப்பாய்,வருடம் பலவினும்
ஓர்நாட் போலமற் றோர்நாள் தோன்றாது
பலவித வண்ணம் வீட்டிடைப் பரவ
நடத்திடுஞ் சக்தி நிலையமே!நன்மனைத்
தலைவீ!ஆங்கத் தனிப்பதர்ச் செய்திகள்
அனைத்தையும் பயன்நிறை அனுபவ மாக்கி,
உயிரிலாச் செய்திகட்கு உயிர்மிகக் கொடுத்து,
ஒளியிலாச் செய்திகட்கு ஒளியருள் புரிந்து
வான சாத்திரம்,மகமது வீழ்ச்சி,
சின்னப் பையல் சேவகத் திறமை;
எனவரு நிகழ்ச்சி யாவே யாயினும்,
அனைத்தையும் ஆங்கே அழகுறச் செய்து,
இலௌகிக வாழ்க்கையில் பொருளினை இணைக்கும்
பேதை மாசத்தியின் பெண்ணே!வாழ்க!
காளியின் குமாரி!அறங்காத் திடுக
வாழ்க!மனையகத் தலைவீ வாழ்க!
13 கவிதைக காதலி
பாரதியார் கவிதைகள்| தனிப் பாடல்கள்
வாராய்!கவிதையாம் மணிப்பெயர்க் காதலி!
பன்னாள் பன்மதி ஆண்டுபல கழிந்தன,
நின்னருள் வதனம் நான் நேருறக் கண்டே
அந்தநாள் நீயெனை அடிமையாக் கொள,யாம்
மானிடர் குழாத்தின் மறைவுறத் தனியிருந்து
எண்ணிலா இன்பத்து இருங்கடல் திளைத்தோம்;
கலந்துயாம் பொழிலிடைக் களித்தவந் நாட்களிற்
பூம்பொழிற் குயில்களின் இன்குரல் போன்ற
தீங்குரலு டைத்தோர் புள்ளினைத் தெரிந்திலேன்;
மலரினத் துன்தன் வாள்விழி யொப்ப
நிலவிய தொன்றினை நேர்ந்திலேன்;குளிர்புனற்
சுனைகளில் உன்மணிச் சொற்கள் போல் தண்ணிய
நீருடைத் தறிகிறேன்;நின்னொடு தமியனாய்
நீயே உயிரெனத் தெய்வமும் நீயென
நின்னையே பேணி நெடுநாள் போக்கினேன்.
வானகத் தமுதம் மடுத்திடும் போழ்து
மற்றத னிடையோர் வஞ்சகத் தொடுமுள்
வீழ்ந்திடைத் தொண்டையில் வேதனை செய்தன.
நின்னொடு களித்து நினைவிழந் திருந்த
எனைத்துயர்ப் படுத்தவந் தெய்திய துலகிற்
கொடியன யாவுளும் கொடியதாம் மிடிமை
அடிநா முள்ளினை அயல்சிறி தேகிக்
களைந்து பின்வந்து காண்பொழுத ஐயகோ!”
மறைந்தது தெய்வ மருந்துடைப் பொற்குடம்
மிடிமைநோய் தீர்ப்பான் வீணர்தம் முலகப்
புன்தொழில் ஒன்று போற்றுதும் என்பாள்
தென்திசைக் கண்ணொரு சிற்றூர்க் கிறைவனாம்
திருந்திய ஒருவனைத் துணையெனப் புகுந்து,அவன்
பணிசெய இசைந்தேன்,பதகிநீ!என்னைப்
பிரிந்துமற் றகன்றனை பேசொணா நின்னருள்.
இன்பமத் தனையும் இழந்துநான் உழன்றேன்,
சின்னாள் கழிந்தபின் -யாதெனச் செப்புகேன்!
நின்னொடு வாழ்ந்த நினைப்புமே தேய்ந்தது.
கதையிலோர் முனிவன் கடியதாஞ் சாப
விளைவினால் பன்றியா வீழ்ந்திடு முன்னர்த்
தன்மக னிடை “என் தனயநீ யான்புலைப்
பன்றியாம் போது பார்த்துநில் லாதே!
விரைவிலோர் வாள்கொடு வெறுப்புடை யவ்வுடர்ல
துணித்தெனைக் கொன்று தொலைத்தலுன் கடனாம்.
பாவமிங் கில்லையென் பணிப்பிஃ தாகலின்!”
தாதைசொற்கு இளைஞன் தளர்வொடும் இணங்கினான்.
முனிவனும் பன் றியா முடிந்தபின்,மைந்தன்
முன்னவன் கூறிய மொரீயினை நினைந்தும்,
இரும்புகழ் முனிவனுக்குன இழியதா மிவ்வுடல்
அமைந்தது கண்டுநெஞ் சழன்றிடல் கொண்டும்.
வாள்கொடு பன்றியை மாய்த்திட லுற்றனன்,
ஆயிடை மற்றவ் வருந்தவப் பன்றி
இனையது கூறும்.“ஏடா!நிற்க!
நிற்க!நிற்க!முன்னர்யாம் நினைந்தவாறு
அத்துணைத் துன்புடைத் தன்றிவ் வாழ்க்கை
காற்றும் புனலும் கடிப்புற் கிழங்கும்
இனையபல் லின்பம் இதன் கணே யுளவாம்;
ஆறேழ் திங்கள் அகன்றபின் வருதியேல்
பின்னெனைக் கோறலாம்”பீழையோ டிவ்வுரை
செவியுறீஈ முடிசாய்த் திளையவன் சென்றனன்.
திங்கள்பல போனபின் முனிமகன் சென்ற
தாதைப் பன்றியோர் தடத்திடைப் பெடையொடும்
போத்தினம் பலவொடும் அன்பினிற் பொருத்தி
ஆடல்கண் டயிர்த்தனன். ஆற்றொணா தருகுசென்று
“எந்தாய்!எந்தாய்!யாதரோ மற்றிது!
வேதநூ லறிந்த மேதகு முனிவரர்
போற்றிட வாழ்ந்தநின் புகழ்க்கிது சாலுமோ?”
எனப்பல கூறி இரங்கினன்;பின்னர்
வாள்கொடு பன்றியை பாய்ததிடல் விழைந்தான்.
ஆயிடை முனிவன் அகம்பதைக் துரைக்கும்
“செல்லடா! செல்க தீக்குணத் திழிஞ!
எனக்கிவ் வாழ்க்கை இன்புடைத் தேயாம்;
நினக்கிதில் துன்பம் நிகழுமேல் சென்றவ்
வாளினின் நெஞ்சை வகுத்து நீ மடிக
என்றிது கூறி இருந்தவப் பன்றிதன்
இனத்தொடும் ஓடி இன்னுயிர் காத்தது.
இன்னது கண்ட இளையவன் கருதும்.
“ஆவா!மானிடர் அருமையின் வீழ்ந்து
புன்னிலை யெய்திய போழ்ததில் நெடுங்கால்
தெரு மரு கின்றிலர் சிலபகல் கழிந்தபின்
புதியதா நீசப் பொய்மைகொள் வாழ்வில்
விருப்புடை யவராய் வேறுதா மென்றும்
அறிந்திலரேபோன் றதிற்களிக் கின்றார்.
என்சொல்கேன் மாயையின் எண்ணரும் வஞ்சம்”.
திமிங்கில வுடலும் சிறியபுன் மதியும்
ஓரேழ் பெண்டிரும் உடையதோர் வேந்தன்
தன்பணிக் கிசைந்தென் தருக்கெலாம் அழிந்து
வாழ்ந்தனன் கதையின் முனிபோல் வாழ்க்கை!
14 மது
பாரதியார் கவிதைகள்| தனிப் பாடல்கள்
போகி
பச்சை முந்திரித் தேம்பழங் கொன்று
பாட்டுப் பாடிநற் சாறு பிழிந்தே
இச்சை தீர மதுவடித் துண்போம்;
இஃது தீதென் றிடையர்கள் சொல்லும்
கொச்சைப் பேச்சிற்கை கொட்டி நகைபோம்;
கொஞ்சு மாரும் கூட்டுணும் கள்ளும்
இச்சகத்தினில் இன்பங்க ளன்றோ?
இவற்றின் நல்லின்பம் வேறொன்று முண்டோ?
யோகி
பச்சை முந்திரி யன்ன துலகம்;
பாட்டுப் பாடடல் சிவக்களி எய்தல்;
இச்சை தீர உலகினைக் கொல்வோம்;
இனிய சாறு சிவமதை உண்போம்;
கொச்சை மக்களுக் கிஃதெளி தாமோ?
கொஞ்சு மாதொரு குண்டலி சக்தி
இச்சகத்தில் இவையின்ப மன்றோ?
இவற்றின் நல்லின்பம் வேறுளதாமோ?
போகி
வெற்றி கொள்ளும் படைகள் நடத்தி
வேந்தர் தம்முட் பெரும்புகழ் எய்தி
ஒற்றை வெள்ளைக் கவிதை உயத்தே
உலகம் அஞ்சிப் பணிந்திட வாழ்வோம்;
சுற்று தேங்கமழ் மென்மலர் மாலை
தோளின் மீதுருப் பெண்கள் குலாவச்
சற்றும் நெஞ்சம் கவலுத லின்றித்
தரணி மீதில் மதுவுண்டு வாழ்வோம்.
யோகி
வெற்றி ஐந்து புலன்மிசைக் கொள்வோம்;
வீழ்ந்து தாளிடை வையகம் போற்றும்;
ஒற்றை வெள்ளைக் கவிதைமெய்ஞ் ஞானம்
உண்மை வேந்தர் சிவநிலை கண்டார்;
மற்றவர் தம்முட் சீர்பெற வாழ்வோம்;
வண்ம லர்நறு மாலை தெளிவாம்!
சுற்றி மார்பில் அருள்மது வுண்டே
தோகை சக்தியொ டின்புற்று வாழ்வோம்.
போகி
நல்ல கீதத் தொழிலுணர் பாணர்
நடனம் வல்ல நகைமுக மாதர்
அல்லல் போக இருடன் கூடி
ஆடி யாடிக் களித்தின்பங் கொள்வோம்;
சொல்ல நாவு கனியுத டாநற்
சுதியிலொத்துத் துணையொடும் பாடி
புல்லும் மார்பினோ டாடிக் குதிக்கும்
போகம் போலொரு போகமிங் குண்டோ?
யோகி
நல்ல கீதம்,சிவத்தனி நாதம்,
நடன ஞானியர் சிற்கபை யாட்டம்;
அல்லல் போக இவருடன் சேர்ந்தே
ஆடி யாடிப் பெருங்களி கொள்வோம்;
சொல்ல நாவில் இனிக்கு தடா!வான்
சுழலும் அண்டத் திரளின் சுதியில்
செல்லும் பண்ணொடு சிற்சபை யாடும்
செல்வம் போலொரு செல்வமிங் குண்டோ?
ஞானி
மாத ரோடு மயங்கிக் களித்தும்
மதுர நல்லிசை பாடிக் குதித்தும்
காதல் செய்தும் பெறும்பல இன்பம்,
களில் இன்பம் கலைகளில் இன்பம்,
பூத லத்தினை ஆள்வதில் இன்பம்
பொய்மை யல்ல இவ்வின்பங்க ளெல்லாம்
யாதுஞ் சக்தி இயல்பெனக் கண்டோம்
இனைய துய்ப்பம் இதயம் மகிழ்ந்தே.
இன்பந் துன்பம் அனைத்தும் கலந்தே
இச்ச கத்தின் இயல்வலி யாகி
முன்பு பின்பல தாகியெந் நாளும்
மூண்டு செல்லும் பராசக்தி யோட
அன்பில் ஒன்றிப் பெருஞ்சிவ யோகத்
தறிவுதன்னில் ஒருப்பட்டு நிற்பார்,
துன்பு நேரினும் இன்பெனக் கொள்வார்
துய்ப்பர் இன்பம் மிகச்சுவை கொண்டே.
இச்சகத்தோர் பொருளையுந் தீரர்
இல்லை யென்று வருந்துவதில்லை;
நச்சி நச்சி உளத்தொண்டு கொண்டு
நானிலத்தின்பம் நாடுவதில்லை;
பிச்சை கேட்பது மில்லை;இன்பத்தில்
பித்துக் கொண்டு மயங்குவ தில்லை;
துச்ச மென்று சுகங்களைக் கொள்ளச்
சொல்லு மூடர்சொற் கேட்பதும் இல்லை.
தீது நேர்ந்திடின் அஞ்சுவ தில்லை.
தேறு நெஞ்சினொ டேசிவங் கண்டோர்;
மாதர் இன்பம் முதலிய வெல்லாம்
வைய கத்துச் சிவன் வைத்த வென்றே
ஆத ரித்தவை முற்றிலும் கொள்வார்;
அங்கும் இங்குமொன் றாமெனத் தேர்வார்;
யாது மெங்கள் சிவன்திருக் கேளி;
இன்பம் யாவும் அவனுடை இன்பம்.
வேத மந்திர நாதம் ஒருபால்
வேயி னின்குழல் மெல்லொலி ஓர்பால்,
காதல் மாதரொ டாடல் ஒருபால்,
களவெம் போரிடை வென்றிடல் ஓர்பால்,
போத நல்வெறி துய்த்திடல் ஓர்பால்,
பொலியுங் கள்வெறி துய்த்தல்மற் றோர்பால்;
ஏதெ லாம்நமக் கின்புற நிற்கும்
எங்கள் தாய்அருட் பாலது வன்றே.
சங்கீர்த்தனம்
மூவரும் சேர்ந்து பாடுதல்
மதுநமக்கு,மதுநமக்கு,மதுநமக்கு விண்ணெலாம்,
மதுரமிக்க ஹரிநமக்கு,மதுவெனக் கதித்தலால்;
மதுநமக்கு மதியுநாளும்,மதுநமக்கு வானமீன்,
மதுநமக்கு,மண்ணுநீரும் மதுநமக்கு,மலையெலாம்,
மதுநமக்கொர் தோல்விவெற்றி,மதுநமக்கு வினையெலாம்,
மதுநமக்கு,மாதரின்பம்,மதுநமக்கு மதுவகை;
மதுநமக்கு,மதுநமக்கு,மதுமனத்தொடாவியும்
மதுரமிக்க சிவநமக்கு மதுவெனக் கதித்தலால்.
15 சந்திரமதி
பாரதியார் கவிதைகள்| தனிப் பாடல்கள்
ராகம்-ஆனந்த பைரவி தாளம்-ஆதிபச்சைக் குழந்தை யடி!-கண்ணிற்
பாவை யடி சந்திரமதி!
இச்சைக் கினிய மது!;-என்தன்
இருவிழிக்குத் தே நிலவு;
நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே-நல்ல
நாகமணி யுள்ளதென்பார்;
துச்சப்படு நெஞ்சி லே-நின்தன்
சோதி வளரு தடீ!
பேச்சுக் கிடமே தடி!-நீ
பெண்குலத்தின் வெற்றி யடி!
ஆச்சர்ய மாயை யடி!-என்தன்
ஆசைக் குமாரி யடி!
நீச்சு நிலை கடந்த-வெள்ள
நீருக் குள்ளே வீழ்ந்தவர்போல்,
தீச்சுடரை வென்ற வொளி-கொண்ட
தேவி!நினை விழந்தேனடி!
நீலக் கடலினிலே-நின்தன்
நீண்ட குழல் தோன்றுதடி!
கோல மதியினி லே-நின்தன்
குளிர்ந்த முகங் காணுதடி!
ஞால வெளியினி லே-நின்தன்
ஞான வொளி வீசுதடி!
கால நடையினி லே-நின்தன்
காதல் விளங்குதடி! (பச்சைக் குழந்தை யடி!)
Bharathiyar Kavithaigal in tamil
– பாரதியார்